ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

உலக புத்தக தினம்

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம். உலகம் கொண்டாடும் நாடகங்களை எழுதிய ஷேக்ஸ்பியர் நினைவு தினத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக புத்தக தினமாக  அறிவித்துள்ளது.

புத்தகங்கள் - நம் நண்பர்கள், நம் ப்ரியத்துக்குரிய காதலிகள், நம் ஆலோசகர்கள், வலிநிவாரணிகள், தனிமைத் துணைகள், ஆசான்கள் இப்படி எல்லாமுமாக இருப்பவை.





வாசிப்பின் வசம் நம்மை ஒப்படைத்துவிட்டால் புத்தகங்கள் நம்மை வளர்த்துவிடும் நல்ல பெற்றோர்களைப் போலவே.

நான் எப்போது இருந்து வாசிக்கத் துவங்கினேன் ..?

நான்காம் வகுப்பிலிருந்து என்பது என் ஞாபகத்தில் இருப்பது. கிராமத்தில் புத்தகங்களை வீடு நிறைய அடுக்கி வைத்திருக்கும், தினமும் வேலைக்குச் சென்று விட்டு வரும் போதெல்லாம் கை நிறைய இதழ்களையும் புத்தகங்களையும் வாங்கி வரும் ஜெயபால் அண்ணனின் வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஆனந்தவிகடன், குமுதம், தேவி, ராணி என வார இதழ்களில் இருக்கும் குட்டிக் குட்டித் துணுக்குகள், கதைகள், நகைச்சுவைகளை வாசிப்பேன்.

பின்பொருமுறை காமிக்ஸ் பரிச்சயமானது. பிறகு சனிக்கிழமைகளில் பேப்பர் போடுபவர் தன் சைக்கிளில் தொங்கவிட்டபடி வரும் தினத்தந்தியின் லச்சினை அச்சிடப்பட்ட துணிப்பையிலிருந்து எடுத்துத் தரும் ராணி காமிக்ஸை வாங்க அவர் பின்னாலேயே ஓடுவேன். அதற்கான காசை வாரம் முழுதும் கிடைக்கும் பாக்கெட் மணியிலிருந்து சேமித்து டவுசர் பாக்கெட்டிலேயே வைத்திருப்பேன். மேலும், அண்ணாச்சி கடையில் பழைய காமிக்ஸ் பாதிவிலைக்குக் கிடைக்கும் அதையும் வாங்கிப் படிப்பேன். இன்னொரு அண்ணாச்சிக்கு நான் ராணி காமிக்ஸ் கொடுத்தால் அவர் அம்புலிமாமா அல்லது பூந்தளிர் மாதிரி பழைய புத்தகங்களைத் தருவார். இப்படி பண்டமாற்று முறையிலும் படிப்பேன்.

பெரியப்பா ஒருவர் டீக்கடை வைத்திருந்தார். வெள்ளிக்கிழமை சாயங்காலம் போனால் தினத்தந்திக்கு இணைப்பாக வரும் தங்க மலர் இதழை எடுத்து வைத்திருந்து தருவார். அதைப் படித்து முடித்துவிட்டு மறக்காமல் சனிக்கிழமை தந்துவிட வேண்டும்.

பின்னர், வார இறுதிகளில் செந்தில் மாமாவுடன் உறவினர் வீடுகளுக்கு அல்லது திரைப்படங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அவர் அவருக்குப் பிடித்தமான பாக்யாவும் எனக்கு லயன், முத்து காமிக்ஸ் இதழ்களையும் வாங்கித் தந்துவிட இரண்டையும் இருவரும் மாற்றி மாற்றி பேருந்திலேயே படித்து முடித்துவிடுவோம்.

ஏழாம் வகுப்புக்கு வடக்கிபாளையம் எனும் கிராமத்தின் பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். அப்பா,அம்மாவின் வேலையின் பொருட்டு. மிகவும் தனிமையான நாட்களை அது தந்தது. அந்தச் சமயத்தில் தான் அங்கொரு நல்ல நூலகமும் அதைவிடவும் அருமையான நூலகர் தாத்தாவும் கிடைத்தார்கள். நான் ஆர்வமாகப் போய் அவரிடம் விசாரித்ததும், என் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் உறுப்பினாரன பின் , இரண்டு மூன்று நாட்களுக்கொருமுறை அங்கு புத்தகங்களை எடுத்து வந்து வாசிப்பேன். நூலகர் மிகுந்த ஆர்வமாக புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்க எடுத்துத் தருவார். ஈசாப் நீதிக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள், 1001 அரேபியக் கதைகள், என மிகச் சிறந்த சிறுவர் நூல்களையும் அறிவியல் நூல்களையும் தந்து படிக்கச் செய்தார்.

அதன் பின்னர் பாரதியார் கவிதைகளில் நாட்டம் அதிகமாக, பின்னர் தான் கவிதைகளாகத் தேடித்தேடி வாசித்தது.

நடக்கும் போது, உட்காரும் போது, சாப்பிடும் போது, நள்ளிரவு வரை என வாசிப்பின் அத்தனை சுகங்களையும் அனுபவித்து வாசித்தேன். 

அப்போதெல்லாம் புத்தகங்கள் அதிகம் கிடைக்காது, இப்போது புத்தகங்கள் ஏராளம் கிடைக்கின்றன. வாசிக்க நேரமும் மனநிலையும் வாய்ப்பது தான் பெரும்பாடாக இருக்கிறது.

பெரும்பாலும் பரிசாகத் தருவது புத்தகங்களைத்தான். பரிசாக வருவதும் புத்தகங்கள் தாம். இது ஒரு ஆரோக்கியமான பழக்கம் என்றே நினைக்கிறேன்.

வாசிப்பின் மீதான தாகம் தான் எழுத்து வரைக்கும் கொண்டு வந்தது. அவ்வப்போது இதழ்கள் நடத்துவது, இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது, போன்ற அத்துணை முனைப்புகளின் மூல வேர் அதுதான்.

வாசித்தல் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமன்று. அது அதையும் தாண்டிய ஒரு அறிவார்ந்த செயல் என்றே நினைக்கிறேன். நம்மை செதுக்கிக்கொள்ள, நம்மை உணர்ந்து கொள்ள, நம்மைத் தற்காத்துக்கொள்ள நமக்கு  ஒரு கருவி.

நாம் திரை ஊடகத்துக்குத் தரும் அதீத முக்கியத்துவத்தை வேறெதற்கும் தராமல் போனதுதான் நாம் நம்மை கீழ்மைப்படுத்தத் துவங்கிய காலம். நாம் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களை நம்புகிறோம், அவர்கள் ரட்சகர்கள் என நினைக்கிறோம். திரைப்படங்களைப் பார்த்தே வளர்கிறோம். அதற்குத் தரும் முக்கியத்துவத்தில்  கொஞ்சம் கூட புத்தக வாசிப்புக்குத் தருவதில்லை. புத்தகங்களுக்குச் செய்யும் செலவு நம் அறிவின் மூலதனம் என நாம் முழுமையாக நம்புவதில்லை.  

இன்றும் யாவரும் கைவிட்டுவிடும் நிலையிலும் புத்தகங்கள் தரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் வேறெதுவும் தந்துவிட முடிவதில்லை.

குழந்தைகளை வாசிக்கச் சொல்வோம். காட்சிகள் தரும் கற்பனையை விட கதைகளும் புத்தகங்களும் தூண்டி விடும் கற்பனைகள் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன. 

வாசிப்போம், வாசிப்பு தரும் அழகிய உணர்வை, அது தரும் ஒரு துளி போதையை நேசிப்போம். 


உலக புத்தக தின வாழ்த்துகள்


வியாழன், 20 ஏப்ரல், 2017

குழந்தைகள் கலைக்கொண்டாட்டம் 2017

அன்புடையீர் வணக்கம்,

நமது பொள்ளாச்சியில் இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், முன்னணி இலக்கிய ஆளுமைகளை வருங்காலத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் துவங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சந்திப்பு நடைபெற்று வருகிறது

மேலும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் குழந்தைகள் கலைக் கொண்டாட்டம் என்ற நிகழ்வை முழு நாள் நிகழ்வாக ஒருங்கிணைக்கிறோம்.. வரும் மே மாதம் 21 ஆம் தேதி சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான முழு நாள் கலை நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்நிகழ்வில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

  • சிறுவர்களுக்கான கதை சொல்லல்
  • சிறுவர்களின் கதை சொல்லல்
  • பொம்மலாட்டம்
  • தொலைந்து போன கிராமத்து விளையாட்டுகள் அறிமுகம்
  • சிறுவர்களை ஓவியம் வரையச் செய்தல்
  • சிறுவர்களுக்கான இசை நிகழ்ச்சி
  • நாடகம்
  • விடுகதை
  • பாடல் இன்னும் பல...


இந்நிகழ்ச்சிக்கு தங்கள் குழந்தைகள் மற்றும் தங்கள் அருகில் உள்ள குழந்தைகளை அழைத்து வரலாம். அனுமதி இலவசம். மேலும், குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்கள் , உபகரணங்கள், பரிசுகள் வழங்கப்படும். மதிய உணவும் வழங்கப்படும். இந்நிகழ்ச்சிக்கு குறைந்த அளவே குழந்தைகளை வைத்து நடத்தும் திட்டம் உள்ளதால், முன் பதிவு அவசியம். குழந்தைகளின் வயது வரம்பு : 4 வயது முதல் 13 வயது வரை
விருப்பமுள்ளவர்கள், கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்பு எண்கள் : .அம்சப்ரியா - 90955 07547, இரா.பூபாலன் - 98422 75662

சென்ற வருட நிகழ்வின் சில நல்ல தருணங்கள் :










செவ்வாய், 11 ஏப்ரல், 2017

அடிவயிற்றில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை 

தேநீர் இடைவேளை # 12     அடிவயிற்றில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு


பொட்டைப்புள்ளைய வெளிய அனுப்பிட்டு, வயித்துல நெருப்பக் கட்டிட்டு இருக்க வேண்டி இருக்கு

- இது கொஞ்ச நாட்கள் முன்பு வரைக்கும் வயதுப்பெண்களை வைத்திருக்கும் அம்மாக்களின் அன்றாடப் புலம்பலாக நம் காதுகளில் கேட்டிருக்கும். இப்போது அப்படி இல்லையா ? நிலைமை மாறிவிட்டதா என்றால் மாறிவிட்டது தான். நேரும் எதிருமாக மாறியிருக்கிறது. வயதுப்பெண்களை வெளியில் வேலைகளுக்கும் கல்விக்கும் அனுப்பலாம் என்ற தைரியம் வந்திருக்கிறது. இரவு வேலைக்கும் பெண் பிள்ளைகளை அனுப்பும் துணிச்சல் வந்திருக்கிறது. எதிரான மாற்றம் என்னெவெனில், அம்மாக்கள் இப்படிப் புலம்புவதுதான் இல்லையேயொழிய இப்போதெல்லாம் வயதுப் பெண்களை மட்டுமல்ல சிறுமிகளையும் குழந்தைகளையும் கூட வெளியில் அனுப்ப நாம் பயந்து தான் இருக்கிறோம்.

வெளியில் செல்லும் குழந்தைகளும் சிறுமிகளும் பெண்களும் வீடு திரும்பும் வரைக்கும் வீடே அடி வயிற்றில் நெருபபைக் கட்டிக்கொண்டு இருக்கும்படி ஆகிவிட்டது இன்றைய நாகரீக உலகம். சமீப நாட்களாகப் பெருகி வரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்களும் வன்கொடுமைகளும் நாம் மிகத்தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதைக் கண்கூடாகக் காட்டுகிறது.

கடந்த சில நாட்களில் மட்டும் நம் கண் முன்னால் கொன்று வீசப்பட்ட உயிர்கள் எத்தனை எத்தனை.? சென்னையில் வசித்து வந்த ஏழு வயதேயான ஹாசினி என்ற குழந்தையை நான்கு நாட்களாகக் காணவில்லை என்று தேடிவந்த நிலையில் பைபாஸ் சாலையொன்றில் எரிந்த நிலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. விசாரணையில், ஹாசினியின் அபார்ட்மெண்டில் பக்கத்து வீட்டுக்காரனாகக் குடியிருந்த ஜஸ்வந்த் என்ற இளைஞர் அக்குழந்தையைப் பாலியில் வல்லுறவு செய்து கொன்று எரித்துவிட்டது தெரிய வந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் மனம் நொந்த தருணத்தில் இன்னொரு அதிர்ச்சியான சம்பவம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்தேறியது.  அது சென்னை திருவொற்றியூரை அடுத்துள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ரித்திகா, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது. மூன்று வயதுக் குழந்தையையும் விட்டுவைக்கவில்லை இந்தச் சமூகம். முதலில் இந்தக் கொலையை எதிர்வீட்டுப் பெண் ஒருவர் கொலுசுக்காகக் கடத்திச் சென்று கொன்றுவிட்டார் என்று தான் வழக்குப் பதிவு செய்து விசாரித்திருக்கிறார்கள்.


பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளுக்கு அவர்களின் உடை தான் காரணம் என்று பேசி வந்தவர்களின் முகத்தில் அறைகின்றன இப்படியான மரணங்கள். மூன்று மற்றும் ஏழு வயதுக் குழந்தைகளின் மீதான பாலியல் தூண்டலுக்கு எது காரணமாக இருக்க முடியும் ? அவர்களது உடலா, உடையா ?

அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 16 வயது நந்தினி, டிசம்பர் 26 அன்று காணாமல்போனார். புகாரை போலீஸார் அலட்சியமாகக் கையாண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் தந்த அழுத்தத்தின் விளைவாக நடவடிக்கைகள் தொடங்கி, ஜனவரி 14 அன்று கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து நிர்வாண நிலையில் இந்தச் சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது.

கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் நந்தினியும் காதலித்ததாகவும் விளைவாக, நந்தினி கருவுற்றதாகவும் திருமணத்துக்கு அவர் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், நந்தினியைத் தன்னுடைய பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் பழகிய மணிகண்டன், தனது நண்பர்கள் மணிவண்ணன், வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகியோருடன் சேர்ந்து அவரைக் கொன்றதாகப் புகார் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நந்தினி கொல்லப்படுவதற்கு முன்பு, கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நான்கு இளைஞர்களும் இப்போது கைதுசெய்யப் பட்டிருக்கிறார்கள்.

நந்தினி காணாமல்போய் 11 நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பதும், 20 நாட்களுக்குப் பிறகுதான் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது என்பதும் 20 நாட்களுக்குப் பிறகுதான் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் காவல் துறையின் அலட்சியப் போக்குக்கு ஓர் உதாரணம். சாதியம் சார்ந்து நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கின்றனவே அன்றி குறையவில்லை.

பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளோடு சாதி, மத பின்புலத்தில் அவர்கள் நசுக்கப்படுவதும் இப்போது வெளிச்சமாகியிருக்கிறது. சாதியின் பெயரால் பெண்களுக்கு நடந்தேறும் வன் கொடுமைகள் நம்மை மேம்பட்ட நாகரீக சமூகத்திலிருந்து காட்டுமிராண்டிகளினும் கேவலமான இனமாக பின்னோக்கிக் கொண்டு சேர்க்கிறது.


இப்படி நாளைக்கு பல பெண்களும் குழந்தைகளும் சிதைக்கப்பட்டு நசுக்கப்படுகிறார்கள். டெல்லியில் நிர்பயாவுக்கு ஓடும் பேருந்தில் நடந்த வன்முறையின் பின்னர் நாடே கொந்தளித்ததன் விளைவாகவே கொஞ்சமேனும் தற்போது விழிப்புணர்வும், சட்டத் திருத்தமும் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாது, இப்போது இது மாதிரியான வன்கொடுமைகள் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன.

இன்றைய இளைஞர்களின் வாழ்வு முறையும் சுற்றுப்புறச் சூழ்நிலையும் அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. கெட்ட தரவுகளும் , தவறான வழிகளும் எதிர்பார்த்ததைவிட அதிகம், எளிதில் கிடைக்கிறது. விளைவு செல்போனிலேயே ஆபாசப் படங்களைப் பார்த்து மனதைக் கெடுத்துக்கொள்கிறார்கள். பள்ளிக் கல்வியிலும் பெண் சமத்துவத்துக்கான விழிப்புணர்வோ, பாலியல் குறித்த விழிப்புணர்வோ இல்லை. பள்ளிக் கல்வி முடித்து வெளிவரும் மாணவர்கள் , முழுமையான மனிதனாக வெளிவருவதற்கான கூறுகள் பாடத் திட்டத்தில் இல்லை. யோசிக்கவே விடாத மனத்தையும், எதிர்காலத்தைப் பற்றிய பயமும் அற்ற வக்கிர மனம் படைத்தவர்கள் கையில் நலிந்த குழந்தைகள் சிக்குகிறார்கள். விளைவு... ஆங்காங்கே நாம் கேள்விப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் அரங்கேறுகின்றன. இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்களில்  பாதிப்பேரே தண்டனைபெறுகின்றனர். மீதிப்பேர் தப்பித்து விடுகின்றனர். தப்பு செய்யத் துணிபவர்களுக்கு, இப்படித் தப்பிப்பவர்கள் பற்றிய எண்ணமே வருகிறது. ஆகவே, தண்டனைகளும் கடுமையாக வேண்டும். சட்டதிட்டங்களும் கண்டிப்பாக வேண்டும்.

பள்ளிக் கல்வி , கல்லூரிக் கல்விகள் மட்டுமல்லாமல், குடும்பத்தில் கிடைத்துக் கொண்டிருந்த அனுபவக் கல்வியும் சிதைந்து விட்டது. நாம் கூட்டுக்குடும்பமாக இல்லை. கூட்டுக்குடும்பங்களில் பல்வேறு உறவுகளுடன் பெண்கள் இருப்பர். அவர்கள் மீதான மரியாதையான அன்பு மற்ற பெண்களையும் மரியாதையாகப் பார்க்கச் செய்யும். அது இல்லாமல் போய்விட்டது. மேலும், குடும்ப அமைப்பில் நாம் ஒட்டியிருப்பதில்லை. அதற்கும் அவசர உலகமும் தொழில்நுட்பமும் காரணமாகிவிட்டது. ஒரே வீட்டில் வசித்தாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாகவே வாழ்கிறோம். ஒன்றாக அல்ல.

உலகம் முழுவதுமே பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் வன்கொடுமைகளும் அதிகரித்திருப்பதாகச் சர்வதேச ஆய்வுகள் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றன. ஸ்போர்ட் ரிச் லிஸ்ட் (Sport Rich Iist) ஆய்வறிக்கை, உலகில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் நடைபெறும் நாடுகள் எனப் பத்து நாடுகளைப் பட்டியலிட்டிருக்கிறது.முதலிடம் எந்த நாட்டுக்குத் தெரியுமா? பெண்ணுரிமையிலும் பெண் சுதந்திரத்திலும் முற்போக்கான எண்ணம் கொண்டது எனப் பலர் நினைத்திருக்கும் அமெரிக்காவில்தான் உலக அளவில் அதிகப் பாலியல் வன்முறைகள் நடக்கிறதாம். ஆனால், அதில் 16 சதவீதப் புகார்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன என்பது இன்னுமொரு அதிர்ச்சி. பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ராணுவத்தில் பணிபுரியும் பெண்களும் விதிவிலக்கல்ல. அவர்களும் பாலியல் அத்துமீறல்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறதாம்.


மக்கள்தொகையில் மட்டுமல்ல, பெண்கள் மீது நிகழும் பாலியல் வன்முறைகளிலும் இந்தியாவுக்கே உலக அளவில் இரண்டாம் இடம். வளர்ந்துவரும் நாடான இந்தியாவின் தேசியப் பிரச்சினையாகவே இது விஸ்வரூபம் எடுத்துவிட்டது. நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில்தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடக்கின்றன என அறிக்கை சொல்கிறது.

ஆண்கள் மனதில் காலங்காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கமும், பெண்ணை ஒரு போகப் பொருளாக நினைப்பதும், ஆணுக்கு அடிமைத் தொழில் செய்வதற்கே பிறப்பெடுத்தவள் பெண் என்கிற கோளாறான கற்பிதங்களுமே பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் தோற்றுவாய். முறைப்படுத்தப்படாத சட்டங்களும் இதுபோன்ற கொடுமைகள் அதிகரிக்கக் காரணம். கடுமையான சட்டங்கள் இருந்தும் அவற்றைச் செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதமே போதும், குற்றவாளிகள் அடுத்த தவறைச் செய்வதற்கு.

இந்தியா ஒளிர்கிறது முன்னேறிக்கொண்டிருக்கிறது என பீத்திக்கொண்டிருப்பவர்களும், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என இந்தியாவைத் தூக்கிப் பிடிக்க நினைப்பவர்களும் கவனம் செலுத்த வேண்டிய பகுதி இது.

ஊடக வெளிச்சங்களுக்கு வராமல் பணத்தாலும், பயத்தாலும், சாதி பிற காரணங்களாலும் இன்னும் நம் நாட்டின் மூலை முடுக்குகளில் தினம் ஒரு நந்தினியும் ஹாசினியும், ரித்திகாவும் கொல்லப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.  நாம் இதோ இந்த மார்ச் மாதத்திலும் மகளிர் தின விழா கொண்டாடிவிட்டு ஓய்ந்திருக்கிறோம். விடிவு என்பது நம் மனங்களில் இருக்கிறது. நாம் மனது வைத்தால் மட்டுமே இருக்கிறது.


கொலுசு மின்னிதழில் வாசிக்க :

http://kolusu.in/kolusu/kolusu_apr_17/index.html#p=26 

பாவம் நமது பாரதப்பிரதமர்





இந்தியத் தலைநகரில் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டம் உச்சமடைந்துள்ளது.

நிவாரணம் வழங்குதல், விவசாயக் கடனை தள்ளுபடி செய்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி தமிழ் விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக டெல்லியில் போராடி வருகிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் அரசின் செவி சாயாததால் நேற்று தங்களது ஆடைகளைக் களைந்து முழு நிர்வாணப்போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.


பிரதமர் அலுவலகம் எதிரே ஆடையின்றி சாலையில் உருண்டு போராட்டம்


மொட்டை அடித்து, மீசை மழித்து, கண்களைக் கட்டிக்கொண்டு , உண்ணாவிரதமிருந்து, எலிக்கறி பாம்புக்கறி உண்டு, மண்டையோட்டை அணிந்து கொண்டு  என எத்தனையோ விதங்களில் கவன ஈர்ப்பை நிகழ்த்தப் போராடி இயலாமல் கடைசியில் வந்தடைந்தது தான் இந்த நிர்வாணப் போராட்டம்.


இந்தியா எனும் மிகப்பெரிய சனநாயக நாட்டின் தலைநகரில் அதுவும் பிரதம மந்திரியின் அலுவலகத்தின் முன்பு நிர்வாணமாக நின்று போராடினால் என்னென்ன பின்விளைவுகள் வரும் என்று அவர்கள் அறியாமலா இருப்பார்கள். நாடே பார்க்கும், வீடும் பார்க்கும் என்பதைப் புரியாமலா இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் ஆடை அவிழ்க்கத் துணிந்தது அவர்களும் அவர்கள் வீட்டினரும் சொகுசாக வாழ்ந்து விடவா. அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த அரசு கொட்டிக் கொடுக்கும் கோடிக்கணக்கான சலுகைகளில் சரி பாதி தங்களுக்கு வேண்டுமென்றா ?

அவர்களின் கோரிக்கை நியாயமானது. சில கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாமல் கூட இருக்கலாம். காது கொடுத்து ஒரு முறை கேட்கக் கூடவா முடியாது.?


நிதி அமைச்சர் சந்தித்தார், அலுவலர்கள் சந்தித்தனர் என்றெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அவர்களது கோரிக்கை பிரதமரைச் சந்திப்பது.  நமது பிரதமர் நமது விவசாயிகளுக்காக கடந்த ஒரு மாதமாக ஒரே ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கான நிலையிலா இருக்கிறார் ?

தொடர்ந்து இப்படியான புறக்கணிப்புகள் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களையும் அவர்களது தொழிலான விவசாயத்தையும் நாட்டுக்கே சோறிடும் விவசாயிகளையும் பெரும் அவமானத்துக்குள்ளாக்கும்.

நமது பிரதமரோ விமானத்தில் பறந்து , ஹெலிகாப்டரில் பறந்து சிலைகளைத் திறந்து வைக்கிறார், வெளிநாட்டு மந்திரிகள், அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார், அவர்களை ஆன்மீக தலங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்கிறார் அவர்களுடன் அழகாக செல்பி எடுத்துக்கொள்கிறார் , யாரோ ஒரு யுவதி இவரது துப்பட்டா அழகு என்று இணையத்தில் புகழ சிரத்தையெடுத்து இவர் அந்தப்பெண்ணுக்கு அதை அனுப்பி வைக்கிறார்.

நமது பிரதமர் நாட்டு மக்களுக்காக ஓயாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்... பாவம் அவருக்கு நேரமிருப்பதில்லை ..

பாருங்கள் , இதோ இப்போது கூட ஆஸ்திரேலிய பிரதமர் வந்து விட்டார் சுயமி எடுக்க வேண்டும், கோவில்கள், சுற்றுலா தலங்களைச் சுற்றிக்காட்ட வேண்டும், எத்தனை எத்தனை வேலைகள் உள்ளன. பாவம் அவரை விட்டுவிடுங்கள் ...









திங்கள், 10 ஏப்ரல், 2017

அப்பாவுக்கு ஆயிரம் கண்கள்

கொலுசு ஏப்ரல் 2017 மின்னிதழில் வெளியாகியிருக்கும் எனது இரண்டு கவிதைகள் ....


அப்பாவுக்கு ஆயிரம் கண்கள்

அப்பாவுக்கு ஆயிரம் கண்கள்
அத்தனையிலும்
என்னைப் பார்த்தபடியேயிருப்பார்

கண்டிப்பு
கனிவு
அன்பு
தைரியம்
நம்பிக்கை
என ஒவ்வொரு கண்ணிலும்
ஒவ்வொரு உணர்ச்சி
எப்போதும் ததும்பியபடியிருக்கும்
அத்தனை கண்களில்
ஒரு துளியும் அவரழுது பார்த்தேனில்லை

தனது மெய்க்கண்கள் இரண்டையும்
இப்போது நிரந்தரமாக மூடிக்கொண்டார்
மிச்சக் கண்களனைத்திலும் என்னையே
கூர்ந்து கவனிக்கிறார் மேலிருந்தபடி


கடைசியாக இறுகத் தாழிடப்பட்ட கணத்தில்
அப்பாவின் கண்களுக்கு நன்றாகத் தெரியும்
என் கண்கள் குளமெனத் தேங்கிக் கிடப்பது
அவரும் ஒரு துளி அழுதிருப்பார்


ஒரு நிரந்தர கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி பிடித்தமான விளையாட்டு
அப்பாவின் கண்களைக் கட்டிவிட்டு
அவரை வட்டமாகச் சுத்திவிட்டு
ஓடுவிடுவோம்
அவரது முதுகுப்புறம் சீண்டுவதும்
கால்களுக்கிடையில் புகுந்து ஓடுவதுமாக
அவரது கைகளுக்கெட்டும் தூரத்திலேயே தான்
ஓடிக்கொண்டிருப்போம்
தொட நெருங்கியும் தொடாமல்
எங்கள் பெரிஞ்சிரிப்புகளுக்காக
நிதம் தோற்பார்.

என் கண்களைக் கட்டிவிட்ட ஒரு நாளில்
அமைதியாக மிக அமைதியாக 
வாசலின் மூலையில் அமர்ந்துகொண்டார்
சத்தமிட்டுத் தேடிச் சலித்து
அழத்துவங்கிவிட்ட நேரத்தில்
சிரித்தபடி வந்து கட்டிக்கொண்டார் 
வாரியணைத்துக்கொண்டு

இப்போதும் அப்படித்தானே அப்பா
என் கண்களைக் கட்டியிருக்கிறீர்கள்
வாசலில் உலகமே இருளாக 
வெறித்து நிற்கிறேன்
முற்றத்தில் கிடத்தியிருக்கிறார்கள் உங்களை
ஓடி வந்து கட்டிக்கொள்ளுங்கள் அப்பா 
இப்போதும் அழுது  கொண்டிருக்கிறேன் நான்

கொலுசு மின்னிதழ் வாசிக்க :


 

புதன், 5 ஏப்ரல், 2017

வேரென நீயிருந்தாய் … ( அப்பாவின் நினைவுகள் )



“ அப்பா, கோவில் பாளையம் வந்துட்டேன், ஏதாவது வேணுமா ?,”
“ வந்துட்டயாப்பா , தக்காளி ஒரு கிலோ, பச்சை மிளகாய் ஒரு கிலோ வாங்கிட்டு வா "
வீட்டுக்குப் போனதும் எவ்வளவு என்று கேட்பார். "முப்பது ரூபாய் தான்பா.” பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து விடுவார்.
“ அப்பா, பொள்ளாச்சில இருக்கேன், ஏதாவது வேணுமா ? “ சாப்பிட ஏதாவது வாங்கி வரவா ? “
“ வேண்டாம் பா. சாப்பிட இருக்கு "
“ இல்லப்பா, நானும் பாப்பாவும் சாப்பிட வந்தோம். உங்க எல்லாருக்கும் வாங்கிட்டு வந்துடறேன் " வாங்கிக் கொண்டு போனால் அதற்கும் பணத்தைக் கொடுத்துவிடுவார்.
“ ஏன் பா, இப்படி எல்லாத்தையும் நீங்களே பாத்துட்டா நான் என்ன பண்றது ?”
“ இன்னும் இரண்டு வருஷம் இப்படி ஓடி ஓடி உழைப்பனா ? அப்புறம் என்னப்பா, சிவனேன்னு ஊர்ல போய் நல்லா ஓய்வெடுப்பேன்ல. அப்போ முடிஞ்சா நீ என்னை பாத்துக்க. அப்பவும் உங்களையெல்லாம் தொந்தரவு பண்ணவே மாட்டேன். என் ஆசையெல்லாம், இப்படி ஓடிட்டு இருக்கும் போதே போயிடனும் " என்பார்.

என்னை எந்தச் சூழ்நிலையிலும் முகம் வாடிக்கூடப் பார்த்துவிட விரும்பாத அப்பா இப்போது இல்லை. இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. கடந்த மார்ச் ஒன்றாம் தேதி வயிற்று வலி என பொள்ளாச்சியில் காட்டிவிட்டு அவர்களின் பரிந்துரையின் படி பிஎஸ்ஜி மருத்துவமனையில் சேர்த்தோம். குடல் இறக்கம் அறுவை சிகிச்சை 15 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருந்தார். அந்தத் தையலில் குடல் ஒட்டி மீண்டும் இறங்கியிருக்கிறது. குடலில் அடைப்பு இருக்கிறது, மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அன்றிரவு பத்துமணிக்குத் துவங்கி பன்னிரண்டு மணிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. முடிந்து அரை மணி நேரத்திலேயே தீவிர சிகிச்சைப்பிரிவில் பார்த்துப் பேசினேன் அப்பாவிடம். அடுத்த நாள் இருந்துவிட்டு மறுநாள் அறைக்கு மாற்றிவிடலாம் என மருத்துவர் சொன்னதைச் சொன்னேன் . சரி என்றார்.

அடுத்த நாள் தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே இருந்தார் நன்றாகவே பேசினார். மறுநாள் அறைக்கு மாற்றினார்கள் நன்றாகத்தான் இருந்தார். நான்காம் தேதி தம்பியை அப்பாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு வந்திருந்தேன். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அம்மாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்லாலாம், திங்கட்கிழமை வீட்டுக்குக் கிளம்பிவிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். மார்ச் 5 அதிகாலை 12.45க்கு தம்பியிடமிருந்து அவசர அழைப்பு அப்பாவுக்கு மூச்சுத் திணறல் இருப்பதாக. பதறியபடி மருத்துவமனைக்கு அடித்துப்பிடித்து ஓடினேன். நான் சென்று சேர்ந்த நேரம் 1.45 இருக்கும். வாசலிலேயே தம்பி இருந்தான். அண்ணா, பெரியப்பா நம்மள விட்டுப் போயிட்டார்ணா " என்றான்.
நள்ளிரவில் கழிவறைக்குச் சென்று திரும்பியவருக்கு Massive Cardiac Arrest என்று சொல்லக்கூடிய மாரடைப்பு என்று சொல்கிறார்கள். மருத்துவர்கள் நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என கை விரிக்கிறார்கள்.
ஒரு கணம் உலகம் ஸ்தம்பித்துவிட்டது. நம்ப முடியவில்லை. நாளை வீட்டுக்குக் கிளம்பிவிடலாம் என்று சொல்லி இருந்தேனே. நான்கு நாட்கள் சாப்பிட எதுவுமே கொடுக்கவில்லையே நாளை ஏதாவது தரலாமா என்று மருத்துவரிடம் கேட்டிருந்தேனே. எதுவுமே இனி இல்லையா ? அறைக்குச் சென்று பார்க்கிறேன். அப்பாவின் உடலை வெள்ளைத் துணியால் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். உடைந்துபோய் கதறுகிறேன்.

பயிற்சி மருத்துவர் கண் கலங்கி மன்னித்துவிடுங்கள் என்று சொல்லியபடி அப்பாவின் கடைசி நிலைகளை விலக்குகிறார். நான் என் வாழ்வின் கொடுங்கணத்தில் இருக்கிறேன். என்னால் கேட்க முடிகிறது ஆனால் மனம் மாரிலடித்துக்கொண்டு அழுதுகொண்டிருக்கிறது. அப்பாவின் நினைவுகளுடன் இப்போது அம்மாவை நினைத்துப்பார்த்தால் நெஞ்சு எனக்கு வலிக்கிறது. அய்யோ அம்மா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பாளே, அவளுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்.

மாமா வந்துவிட்டார், அம்மாவுக்குச் சொல்லவில்லை. மருத்துவமனையின் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, அப்பாவை அமரர் ஊர்தியில் ஏற்றுகிறோம். அப்பாவின் காலருகில் அமர்ந்திருக்கிறேன் அவரது பாதங்களை வெறித்தபடி..
நினைவுகள் அப்பாவை சுற்றிச் சுழல்கின்றன. எவ்வளவு பெரிய பேரிழப்பு. இன்னும் பல ஆண்டுகள் என்னோடு இருப்பீர்கள் என்று நம்பினேனே அப்பா. எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்று என் ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றியிலும் மகிழ்ச்சியிலும் வருத்தத்திலும் நம்பிக்கையாகவும் பெருமையாகவும் கர்வமாகவும் நினைத்திருந்தேனே அப்பா. இனி யார் இருக்கிறார்கள் ? யார் இருந்தாலும் அது நீங்கள் ஆகுமா ?

5 மார்ச் 2017 என்ற ஒரு நாள் என் நாட்காட்டியில் இல்லாமல் போயிருந்தால் எப்படி இருக்கும் ? இது ஒரு கெட்ட கனவாயிருக்கக் கூடாதா என்ற அபத்த ஆசையும் வந்து கொண்டேயிருந்தது.

அப்பா, எல்லா குழந்தைகளுக்கும் முதல் கதாநாயகன். எனக்கும் அப்படித்தான். என் கதாநாயகன், என் முன்னோடி, என் ரட்சகன். எல்லோரும் வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்ததாகச் சொல்வார்கள். அப்பா தன் வாழ்க்கையை மைனஸிலிருந்து ஆரம்பித்தவர்.
அப்பா பிறந்து சில வருடங்களிலேயே, அப்பாவின் அப்பா வேறொரு பெண்ணுடன் சென்றுவிட அப்பாவின் அம்மா இவரையும் இவரது தம்பியையும் விட்டுவிட்டு வேறொருவருடன் சென்றுவிட்டார். இன்று வரை அவரது அம்மா எங்கு என்று தெரியாது. அவரது அப்பா அவ்வப்போது வருவார் போவார். சில வருடங்களுக்கு முன்பு தான் அவரும் இறந்துவிட்டார். யாரிடமும் பெரிதாக சொல்லாமல் நாங்களே இறுதிக்கடன்களை நிறைவேற்றிவிட்டு வந்தோம்.

இப்படியாக ஐந்து வயதிலேயே நிராதரவான அப்பாவுக்கு பாட்டி தான் ஆதரவு. அம்மாவின் அம்மா. ஆதரவென்றால், அவரும் நான்கு பெண்களைப் பெற்றவர். அன்றாட வாழ்க்கைக்கே அல்லல் பட்டுக்கொண்டிருந்தவர். அப்பா, தனது ஏழு வயதிலேயே வீட்டு வேலைக்குச் சேர்ந்துவிட்டார். அன்றிலிருந்து கடைசி வரைக்கும் உழைத்தவர். ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பட்ட துன்பங்களை எப்போதாவது சொல்வார். மலைப்பாயிருக்கும், அவ்வளவு வலிகளையும் துன்பங்களையும் வறுமையையும் கடந்து வந்தவர். அவர் பட்ட துன்பங்களை நினைத்து அழுதிருக்கிறேன்.அதனாலேயே எப்போதும் தான் பட்ட துன்பங்களை நான் அனுபவிக்கக் கூடாது   என்பார். என்னை கஷ்டப்பட விடக்கூடாது என நினைப்பார்.

சிறு வயதில் ஒரே ஒரு முறை என்னை அடித்திருக்கிறார். அதன் பின்பு இன்று வரைக்கும் கை ஓங்கியதில்லை. ஆனால், கண்டிப்பானவர். அவர் பேச்சை மீறவும் மாட்டேன்.  எப்போதும் அப்பா அம்மாவுடன் அல்லது மாமாவுடன் மட்டுமே வெளியில் போகும் நான், முதன் முறையாக பத்தாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறைக்கு அவ்வை சண்முகி படத்துக்கு நண்பர்களுடன் போகிறேன் என்று கேட்ட போது மறுத்து விட்டார். இப்போதெல்லாம் நண்பர்களுடன் போகக் கூடாது என்றார். அதன் பின்பு எப்போதும் நான் கேட்டதில்லை. கல்லூரி இறுதியாண்டில் ஒரு முறை தொலைபேசியில் அழைத்து " அப்பா, கல்லூரி பாதி நேரம் விடுமுறை. பசங்க எல்லாரும் படத்துக்குக் கூப்பிடறாங்க போய்ட்டு வரட்டுமா ? “ என்று கேட்ட போது, “ சரிப்பா, மளிகைக் கடைக்கு போ, நான் சொல்லிடறேன், அவங்க பணம் தருவாங்க போய்ட்டு ஏதாவது சாப்பிட்டுட்டு வா " என்றார். தேவையான சமயங்களில் அளப்பரிய சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் தந்தவர்.

மாமா வீட்டுக்கு சிறு வயதில் வாரா வாரம் போய் விடுவோம். சனிக்கிழமை இரண்டாம் ஆட்டம், மாமா , அப்பத்தா அப்பா அம்மா என நிறையப் பேர் போவோம். வீட்டுக்கும் திரையரங்கத்துக்கும் இரண்டு கிலோமீட்டர் தூரம். நடக்க வேண்டும். நான் படத்தின் இறுதிக் காட்சி வரும் போதே தூங்கிவிட்டதைப் போல பாசாங்கு செய்வேன். படம் முடிந்ததும் பத்து வயதுப்பையனை தோளில் தூக்கிச் சுமந்தபடி வீட்டுக்கு வருவார். சிரித்தபடி இறங்கி ஓடிப் படுத்துக்கொள்வேன். ஒவ்வொரு வாரமும் இது நடந்திருக்கிறது. இப்போது வரைக்கும் என்னை அப்படித்தான் தூக்கிச் சுமக்கிறார்.

அப்பா முதன் முதலில் அழுது நான் பார்த்தது எனக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் கிடந்த அன்று. அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சைக்காக பதினைந்து வருடங்கள் முன் அறுவை அரங்குக்குப் போகும் முன் என்னைப்பார்த்து அழுதார். நானும் அழுதேன். அவ்வளவுதான். தைரியமும் பிடிவாதமும் தீர்க்கமும் கொண்டவர். இந்த முறை அவர் அறுவைக்குப் போகும் போது அழவில்லை. நானும் அவரது தலையைத் தடவி நம்பிக்கையாக அனுப்பி வைத்தேன்.

அப்பா ஒரு கேண்டீன் வைத்திருந்தார். தனது தொழிலில் நேர்மையாயிருக்கும் ஒருவருக்கு இருக்கும் மிகப்பெரிய தன்னம்பிக்கை , சற்றேயான கர்வம் அவருக்கு எப்போதும் இருக்கும். ஒரு போதும் தரத்தில் சமரசம் செய்து கொண்டதே இல்லை. நாங்கள் எங்களுக்கு என்ன சமைக்கிறோமோ அதே தான் அனைவருக்கும் . விலை குறைந்த பொருட்களையோ , காய்கறிகளையோ அவர் ஒரு போதும் பயன்படுத்த மாட்டார். நிறுவனத்துக்குள் இருக்கும் கேண்டீன் என்பதால் விலை குறைவாகவே இருக்கும். ஆனாலும் அதற்கும் மீறிய சுவையும் தரமும் அவருக்கு இருந்தாக வேண்டும். 24 ஆண்டுகள் அது தான் அவர் தொழில், அவர் உழைப்பு , அவர் சிந்தனை மட்டுமல்ல அவர் உயிரும் கூட அது தான். இறப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட தேங்காய்க்காரர், காய்கறிக்காரர் என அனைவருக்கும் அழைத்து திங்கட்கிழமை எல்லாம் சரியாக வந்து விட வேண்டும் என கட்டளையிடுகிறார். இப்போதும் நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்தத் தொழிற்கூடத்தின் கேன்டீனில் தான் அவர் இருக்கிறார் நினைவுகளாக என்று. சதா சர்வகாலமும் அதே நினைவிலிருந்தவரல்லவா..

நான் காதலிப்பேன் என நானே நம்பவில்லை. அவரா நினைத்திருப்பார். என் விருப்பத்தை  காதலியிடம் சொல்லும் முன்னர் உங்களிடம் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று சொல்லி அவரிடம் சொன்னேன். “ எனக்கு ரத்னாவைப் பிடிச்சிருக்குப்பா உங்களுக்கு ? “ என்று கேட்டபோது , எங்களுக்கும் அதே எண்ணம் தான், உன் விருப்பம் தான் எங்கள் விருப்பமும் என்று எங்களுக்குத் திருமணம் செய்து வைத்து இன்று வரைக்கும் என் குடும்பத்தையும் சேர்த்து அவர் தான் கவனித்துக்கொள்கிறார். வீட்டைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி நீ ஜாலியா இரு எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார். மளிகை, காய்கறி முதல் கொண்டு எல்லாமே வீட்டுக்கு வந்து விடும். ஒரு முறை கூட நாங்கள் அலைந்ததில்லை எதற்கும்.

சென்ற வருடத்தில் ஒரு நாள் , கிராமத்தில் அம்மா பெயரில் இருக்கும் பூர்விக வீட்டை என் பெயருக்கு மாற்றிக்கொள்ளச் சொன்னார். நான் இப்போது என்ன அவசரம் மெதுவாகச் செய்யலாம் என்றேன். ஆனால், அவர் ஒன்று நினைத்தால் முடித்து விடுவார். அந்த வீட்டை என் பெயருக்கு மாற்றச் செய்தார். வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சார இணைப்பு அனைத்தையும் என் பெயருக்கு மாற்றுவதை கண்காணித்து உறுதிப்படுத்திக் கொண்டார். என் காலத்துக்குப் பிறகு நீ எதற்கும் அலையக் கூடாதுப்பா என்றார். மனைவியை அவரது பெற்றோர் அழைப்பது போலவே பாப்பா என்று தான் அழைப்பார். மகள் அவருக்கு குட்டிமா. என்னிடம் பாப்பா வந்து விட்டாளா என்று கேட்டாள் மனைவியைக் கேட்பார். குட்டிப்பாப்பா என்று மகளைக் கேட்பார்.

அவர் என்னிடம் எப்போதும் ஒரு கண்டிப்பு முகத்தைத் தான் காட்டியிருப்பார். எத்தனை பாசமான முகத்தைக் காட்டினாலும் அதில் ஒரு கண்டிப்பு இருக்கும். ஆனால் பேத்தியிடம் அவர் காட்டிய முகம் வேறாக இருந்திருக்கிறது. அவர் இறந்த பிறகு என்னிடம் இருக்கும் அவரது கைபேசியில் பேத்தியும் தாத்தாவும் எடுத்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பார்த்து அழுதிருக்கிறேன். இப்படி ஒரு மலர்ந்த அப்பாவின் முகத்தை நான் அவ்வளவாகப் பார்த்ததே இல்லை. எப்போதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருப்பவர். பாரதியுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார். அவள் பெரியவளாகி அவளுக்கும் ஒரு குழந்தை வரும் வரைக்கும் நீங்கள் இருப்பீர்கள் உங்கள் விருப்பப்படி தான் அனைத்தும் நடக்கும் என்று நான் மனைவியிடம் சொல்லியிருந்தேனே அப்பா. என் கனவுகளைப் பொய்யாக்கிவிட்டல்லவா போயிருக்கிறீர்கள்.

வண்டியில் அப்பாவின் உடலைக் கொண்டு வந்து கிராமத்து வீட்டில் வைத்திருக்கிறோம். அம்மாவுக்கு ஒன்றும் சொல்லாமல் தம்பியையும் ரத்னாவையும் அழைத்து வரச் செய்தோம். அவர் வந்த போது நான் முற்றிலும் உடைந்து விட்டேன். இருபத்தி நான்கு மணி நேரமும் அப்பாவுடன் அவர் தான் உலகம் என்றிருந்தவர். அம்மாவைக் காணச் சகிக்கவில்லை. இயலவில்லை. அம்மாவை இப்படி அழ வைத்ததற்காவும் இப்படி விட்டுப் போனதற்காகவும் அப்பா மீது ஆத்திரமாக வருகிறது.

அப்பாவின் உடலைச் சுற்றிச் சுற்றி வந்து அழுகிறேன். முதல் நாள் எனது கண்ணீரை அனுமதித்த பாரதி அவளும் அழுது தீர்த்தாள். அடுத்த நாள், நான் அவளுக்குத் தெரியாமல் போய் அழ வேண்டி இருந்தது. 180 டிகிரி பார்வையால் என்னைக் கண்காணித்தபடியே இருப்பாள். எப்போது அழுதாலும் ஓடி வந்து கட்டிக் கொண்டு அப்பா போதும் பா அழாதீர்கள் என்று அழுவாள். அவளுக்காக என் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அவளுக்கு நான் அப்பா. என் அப்பா எனக்கு இருந்ததைப் போல அவளுக்காக நான் வாழ வேண்டும்.

அப்பாவின் இறுதிச் சடங்குக்கு வந்த தேங்காய்க்காரர் தம்பி அப்பா எனக்கு பத்தாயிரம் என் மருத்துவச் செலவுக்குத் தந்திருக்கிறார் திருப்பித் தந்துடறேன் என்கிறார். அப்பாவுக்கு காய்கறிகள் கொண்டு வரும் ஆட்டோக்கார அண்ணன் அப்பா என் பொண்ணு காது குத்துக்கு பதினைந்தாயிரம் தந்திருக்கிறார் தந்து விடுகிறேன் என்கிறார். இது தான் அப்பா. யாரிடமும் கடன் இல்லை. கஷ்ட காலத்திலும் கையேந்தாமல் வாழ்ந்தவர். தன்னைப்போல யாராவது கஷ்டப்படுவதைப் பார்த்தால் இருப்பதைத் தந்து விடுவார்.

மின்மயானத்தின் நகரும் உருளைகளுக்கு மேல் அப்பாவைக் கிடத்திவிட்டு அவரது நெஞ்சு மேல் சூடத்தைப் போட்டு என்னை நெருப்பு வைக்கச் சொல்கிறார்கள் என் கதாநாயகனுக்கு, என் கடவுளுக்கு, என் கண்டிப்பான நண்பனுக்கு நெஞ்சின் மேல் நெருப்பிட்டு உள்ளனுப்பி தீக்குத் தின்னக் கொடுத்துவிட்டேன் அப்பாவை.
என் காலாதி காலக் கண்ணீரை சிந்திக்கொண்டிருக்கிறேன். மறதியைப் போலொரு மாமருந்தில்லை என வைரமுத்துவின் வரிகள் ஒலிக்கின்றன. அந்த மாமருந்து எனக்கு வேண்டாம். என் நினைவுகளில் எப்போதும் இருக்கட்டும் வலியாகவும் கண்ணீராகவும்.

இனி அப்பா என்னுடன் தான் இருப்பார் என்று நான் நம்ப வேண்டும். ஒவ்வொரு கவளம் சோறு உண்ணும் போதும் அவரது முகம் வரும், காரின் இடது பக்க முன்னிருக்கையைக் கூர்ந்து கவனித்தால் உட்கார்ந்திருப்பார் பொறுமையா ஓட்டுப்பா என்று. எங்கு போவதாக இருந்தாலும் போய்ச் சேர்ந்த அடுத்த நொடி வழக்கம் போலவே அழைப்பார் பத்திரமா போய்ட்டயா என்று, எப்போது துவண்டு விட்டாலும் தோள் தடவுவார் நான் இருக்கிறேன் என்று. வீட்டுக்கு வர சற்று தாமதமானாலும் அழைப்பார் கண்டிப்பான குரலுடன். அந்த நம்பிக்கையைத் தான் அவர் தந்திருக்கிறார். அப்பா இருக்கிறார் என்ற நம்பிக்கை தான் என்னை வாழ வைக்கும். ...