திங்கள், 27 பிப்ரவரி, 2017

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் வளரும் படைப்பாளர் விருது

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் முப்பெரும் விழா தேனியில் கடந்த 25-02-2017 அன்று நடைபெற்றது. எனக்கு 2016ஆம் ஆண்டுக்கான வளரும் படைப்பாளர் விருது வழங்கப்பட்டது. மேடை அமைப்புக்கும் தோழர் விசாகனுக்கும் மனம் நிறைந்த நன்றி.

உடன் விருது பெற்ற ஆளுமைகளுக்கும் நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...


எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்களிடமிருந்து விருது பெற்ற போது..
அருகில் கவிஞர் நறுமுகைதேவி மற்றும் கவிஞர் சுகிர்தராணி




நிகழ்வில் நூல்கள் வெளியிடப்பட்டன, நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன, தலைமை உரை இருந்தது, சிறப்புரை இருந்தது, குறும்படம் திரையிடப்பட்டது, ஐம்பது பேர்களுக்கும் மேலாக விருதுகள் வழங்கப்பட்டன, வழக்கம் போல கொஞ்சம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது ஆனாலும் குறித்த நேரத்தில் நிகழ்வு முடிந்தது அவ்வளவு ஆச்சர்யம்.

நிகழ்வில் இதுவரை சந்தித்திராத, சந்தித்து பல நாட்கள் ஆன நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததே பெருமகிழ்வு.

தோழர் விசாகனின் அர்ப்பணிப்பான உழைப்பு பாராட்டுதலுக்குரியது. தமிழகம் முழுக்க இருந்து சிறந்த படைப்பாளர்களை, ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து விருது அளித்திருக்கிறார். நிகழ்ச்சியை மிகச்சிறந்த முறையில் ஒருங்கிணைத்திருக்கிறார்.

தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு வகையில் சிறப்பான கூட்டமாக இலக்கிய சந்திப்புகளை ஒருங்கிணைக்கிறார். அவரது பணி சிறக்க வாழ்த்துகள் ..





ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

இளைஞர்களின் காலம்



கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை உங்கள் பார்வைக்கு ...

தேநீர் இடைவேளை # 11       இளைஞர்களின் காலம் 


ஜல்லிக்கட்டு க்கான பட முடிவு


இது இளைஞர்களின் காலம். அரசியல், பொருளாதாரம், இலக்கியம்,தொழில் என சகல துறைகளிலும் இளைஞர்கள் மிகத்தீவிரமாகவும் தொலைநோக்கோடும் இயங்கிக் கொண்டும் சாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இரண்டாம் முறையாக நமது இளைஞர்களை நாம் பெருமையாகக் காண முடிந்தது. முதல் முறையாக ஒரு மாபெரும் அறப்போராட்டத்தை நம் கண் முன்னால் காண முடிந்தது. நாம் வாழும் காலத்தில் இப்படியொரு நிகழ்வு இதற்கு முன்னர் பார்த்திடாதது. இவ்வளவு திடமான, தீர்க்கமான, ஒருங்கிணைந்த ஒரு போராட்டத்தை காலம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.

இந்த இளைஞர்கள், கொஞ்சநாட்களுக்கு முன்னர் வரைக்கும் பேருந்து நிலையங்களில், கல்லூரி வாசல்களில், திரையரங்கங்களில் என சகல இடங்களிலும் கைகளில் திறன்பேசியை வைத்துக்கொண்டு தேய்த்தபடி இருந்தவர்கள். இவர்கள் யாரென்பதை அறிய கொஞ்சம் சென்னை வெள்ளம் உதவியது.

சென்னை வெள்ளத்தின் போது, காவல் துறையை விட, பேரிடர் மீட்புக் குழுவை விட, ஏன் அரசை விடவும் மிகத் தீவிரமாக இயங்கி மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் எந்த புகழுக்கும், பிரதிபலனுக்கும் ஆசைப்படாது தமது கொண்டாட்டங்களை, அலுவல்களை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு பல நாட்கள் சென்னை கடலூர் பகுதிகளில் சுற்றி தமது உதவிகளைச் செய்தபடியிருந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தபடி போதும் போதும் எனும் அளவுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்பியபடி இருந்தனர்.

அது அவர்களின் சிறு தரிசனம் தான். இதோ, இந்தப் புத்தாண்டில் தான் அவர்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளனர். தமிழகமே அதிர அதிர அவர்களது விஸ்வரூப தரிசனம் கிடைத்துள்ளது.. முதலில் யாரும் இவ்வளவு தீவிரமான ஒரு போராட்டத்தை முன்கூட்டியே யோசித்திருக்கவில்லை. ஆங்காங்கே கூடிய மாணவர்கள் தாங்களாகவே ஒன்றிணைந்தார்கள். ஒரே தலைமையின் கீழான போராட்டமாக அல்லாமல், எந்தத் தலைமையும் வழிகாட்டுதல்களும் இல்லாமல், தாங்களே சுயமாக இயங்கினர் ஆனால் இம்மியளவும் பிசகாமல் அறவழியில் நடந்தது அந்தப் போராட்டம்.

ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு இனத்தின் அடையாளம், ஒரு இனத்தின் வரலாற்று எச்சங்களில் அதுவும் ஒன்று என்பதையெல்லாம் அவர்கள் உணர்ந்திருந்தபடியாலேயே இந்தப் போராட்டம் சாத்தியமானது. இந்தப்போராட்டத்தின் பிரதான நோக்கம் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவது தான் என்றாலும், பிற்பாடு பல துணை நியாயம் கோரல்கள் இடைப் புகுத்தப்பட்டன ஆனாலும் ஒரே இலக்கு ஒரே குறிக்கோள் முன்னிறுத்தப்பட்டது இறுதிவரைக்கும்.

சென்னை இளைஞர்கள் ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கூடுவதாக திட்டமிட்டனர். ஜனவரி 16ஆம் நாள் சென்னை இளைஞர்களுக்கு முகநூல்,கட்செவியஞ்சல்,இணையம்,மின்னஞ்சல் என அனைத்து சமூக ஊடகங்களிலும் செய்திகள் அனுப்பப்பட்டன. ஜனவரி 17 அன்று மெரினாவில் கூடலாம் என்று. அது சென்னை தவிரவும் அனைத்து ஊர்களுக்கும் மெல்லப் பரவியது. குறிப்பிட்ட நாளில் மெரினாவில் இளைஞர்கள் கூடினர். அடுத்தடுத்த நாட்களில் கோவை,மதுரை,சேலம்,திருச்சி,ஈரோடு என அனைத்து ஊர்களிலும் தாமாகவே கல்லூரி இளைஞர்கள் திரள் திரளாகக் கூடினர்.



இந்தக் கூடுகையும், போராட்டமும் முழுக்க முழுக்க சமூக ஊடகங்களால், இணையத்தாலேயே சாத்தியமானது. அது இல்லையென்றால் தமிழகம் முழுக்கவும் ஒரே சமயத்தில் இப்படியொரு மாபெரும் எழுச்சி நடந்திருக்காது. ஆரம்பநாளில் செய்த ஊடகங்களில் கூட பெரிய ஆதரவு இருந்திருக்கவில்லை . ஆனாலும் அடுத்தடுத்த நாட்களில் அவர்களும் இந்த எழுச்சியை வியந்து கொண்டாடி வலு சேர்த்தனர்.  எந்த அரசியல் நோக்கமுமல்லாது , எந்த அரசியல் பின்புலமுமல்லாது, அரசியல் துணையுமின்றி தாங்களே முன்வந்து போராடிய இப்போராட்டம் வெற்றிகரமாக நடக்கவும் இவையே காரணங்களாயின.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழ் நாட்டு இளைஞர்களின் அறப்போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது.வெளிநாடு வாழ் தமிழர்களும் ஆங்காங்கே இருந்தபடி தங்களது தாய்மண்ணின் எழுச்சி நாயகர்களுக்கு தங்களது ஆதரவை அழுத்தமாக இணையம் வழி பகிர்ந்தபடியே இருந்தார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி , இந்தத் திட்டமிடலும் இன்றி காலை முதல் மாலை வரை, விடிய விடிய என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அதை எதிர்க்கும் பீட்டா உள்ளிட்ட அமைப்புக்கு எதிராகவும் கோஷங்களிட்டபடி போராடி வந்தனர். நான் பார்த்தவரைக்கும் எந்த சட்ட திட்டங்களும் கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஒரு கட்டுக்கோப்போடு நடந்த மாபெரும் போராட்டம் இதுவாகவே இருக்கும்.

இளைஞர்கள் தாங்கள் கற்ற கல்வியின் ஒளியை போராட்டக் களமெங்கும் பாய்ச்சியபடியே இருந்தனர். ஆண்களும் பெண்களுமாக இளைஞர்களும் இளைஞிகளுமாக கூட்டம் கூட்டமாக இருந்தாலும் சுய ஒழுக்கத்துடனும் சிறு சலசலப்போ அத்துமீறலோ எதுவுமின்றி ஒவ்வொரு ஊரிலும் மிக கண்ணியமாக கூட்டம் நடந்துகொண்டிருந்தது. இந்த கண்ணியமும் நேர்மையும், முதல் நாளில் கல்லூரி இளைஞர்களின் போராட்டமாகத் துவங்கிய இந்தக் கூடுகை, ஒரு யுகப்புரட்சியாக அடுத்தடுத்த நாட்களில் மாற வித்தானது.

 இளைஞர்களின் கண்ணியமான, நியாயமான போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு அப்பாக்கள்,அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து இணைந்துகொண்டார்கள். முதியவர்களும் கூட முடிந்தவரை இவர்களுக்கு ஆதரவாக சும்மாவேனும் அமர்வோம் என்று இணைந்துகொண்டார்கள். இவர்களுடன் ஆங்காங்கே பள்ளி மாணவர்களும் தன்னிச்சையாக வந்து சேர்ந்துகொள்ள அவர்களது ஆசிரியர்களும் கரம் கோர்த்துக்கொண்டனர். வேலைக்குச் செல்பவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டும், இயலாதவர்கள் மாலை முதல் இரவு முழுவதும் என ஆத்மார்த்தமாக இணைந்த கூட்டமாக ஆனது.

களத்தில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு உணவு, தண்ணீர், சிற்றுண்டிகள், தேநீர் என எந்தக்குறையுமின்றி வந்துகொண்டே இருந்தது தான் ஆச்சர்யம். அதிலும் யார் கொடுக்கிறார்கள் எங்கிருந்து வருகிறது என்று எந்தத் தகவலுமின்றி எந்த எதிர்பார்ப்புமின்றி தந்து கொண்டேயிருந்தார்கள். ஒரு சின்ன டியூப் லைட்டைக் கோவிலுக்கு தானமாகக் கொடுத்துவிட்டு வெளிச்சமே வராத அளவுக்கு அதன் மீது உபயம் என்று எழுதி தமது பெயரைப் பொறித்துக்கொள்ளும் நம் சமூகம் தான் தங்களது அடையாளங்களைக் கூட மறந்துவிட்டு அள்ளியள்ளிக் கொடுத்தபடியிருந்தனர்,

ஒரு தம்பதியினர் போராட்ட நாட்கள் அனைத்திலும் இரண்டு வேளையும் சலிக்காமல் சளைக்காமல் தேநீர் போட்டுக் கொண்டு வந்து ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக விநியோகித்தபடியே இருந்ததைப் பார்க்கிறோம், பிஸ்கெட்டுகள் விற்கும் சிறு வியாபாரி தான் வியாபாரத்துக்குக் கொண்டு வந்து பிஸ்கெட் பாக்கெட்டுகள் அனைத்தையும் உடைத்து இளைஞர்களுக்கு இலவசமாகவே கொடுத்ததைப் பார்த்து கண்கலங்கி நிற்கிறோம். மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனை செவிலியர்களையும் மருந்துகளையும் இலவசமாக வழங்கி இளைஞர்களுக்கு அன்பு செய்கின்றனர். பெண்களும் போராட்டக்களத்தில் இருப்பதால் சில அமைப்புகள் சமயோசிதமாக சிந்தித்து நடமாடும் கழிப்பறைகளைக் களத்துக்கே கொண்டு வந்து அவர்களுக்காக வைத்திருந்து அரணாக நிற்கிறார்கள். இந்த அமைப்பு அந்த அமைப்பு நற்பணி மன்றங்கள் இயக்கங்கள் என அனைவரும் தங்களது முகங்களை முன்னிறுத்தாமல் பல்வேறு உதவிகளைச் செய்தபடியே இருக்கின்றனர்.

போராட்டம் வெறும் கூச்சல்களாகவும், அல்லது இறுக்கமாகவும் இருந்திருந்தால் இத்தனை நாட்கள் தொடர்வதில் தொய்வு ஏற்பட்டிருக்கக்கூடும். இளைஞர்கள் அத்தனை உற்சாகமாக இருந்தனர் எந்நேரமும். அவர்களை உற்சாகமாக்க ஒரு இடத்தில் பறை இசை நடக்கிறது, ஒரு இடத்தில் தேவராட்டம், கும்மி ஆடுகிறார்கள், ஒரு இடத்தில், காவடி, கிராமிய நடனங்கள் விளையாட்டு என களமே களைகட்டியிருக்கிறது. மாணவர்கள் தங்களது திறமைகளைக் காட்டுகின்றனர். பொதுமக்கள் தஙகளால் முடிந்தவரை இணைந்து அவர்களை உற்சாகமூட்டுகின்றனர். போராட்டம் நடந்த ஆறு நாட்களும் இரவுபகலாக உற்சாகம் குறையாமல் இளைஞர்கள் இருந்தது தான் இந்நிகழ்வில் மிகப்பெரும் சிறப்பு.

பெரும்பாலும் பெண்களும் பெரியவர்களும் இந்தக்கால இளைஞர்களைக் குறை கூறித்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக அவர்களது முழுமையான ஆதரவு இப்போது அவர்களுக்குக் கிடைத்தது. ஒவ்வொரு ஊரிலும் களத்தில் இருந்த இளைஞர்களுக்கு உறுதுணையாக ஆயிரக்கணக்கான குடும்பப் பெண்களும் பெரியவர்களும் இருந்தனர்.

இளைஞர்களின் தன்னொழுக்கத்தை இந்தக்கூட்டம் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியது. இத்தனை கூட்டம் கூடுகையில் யாரோ ஒரே ஒருவர் கல்லெடுத்து எறிந்திருந்தாலும் கூட வன்முறை கட்டுக்கடங்காமல் வெடித்திருக்கும். ஆனால் இந்தப் போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றியின் பின் இவை இருந்தன. போக்குவரத்துக்கு எந்த இடையூறையும் இவர்கள் ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே அவர்களே போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டனர். தாங்கள் போட்ட குப்பைகளைக் கூட தாங்களே அள்ளியெடுத்து அப்புறப்படுத்தினர்.  பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் முதல் மரியாதை தந்து வழியும் இடமும் தந்தனர். தங்களது சக மாணவ மாணவிகளை பால்வேறுபாடின்றி மதித்து நடத்தியும், விட்டுக்கொடுத்துமாக   அவ்வளவு பக்குவமாக நடந்துகொண்டனர்.

இவ்வளவு சாத்வீகமாக ஒரு போராட்டம் நடக்கிறது, இது இப்படியே நடந்து வெற்றியும் பெற்றுவிட்டால் என்ன ஆகும் என அதிகார வர்க்கத்தின் மூளைகள் யோசிக்கத் துவங்கின. ஒரு வேளை அமைதியாக இந்தக் கூட்டம் வெற்றியுடன் கலைந்து விட்டால் நாளை ஒவ்வொரு விசயத்துக்கும் கூடுவார்கள். விவசாயம், நதிநீர் , அந்நிய வியாபார ஆதிக்கம், என எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன அவர்கள் போராட. அது நடந்துவிடவே கூடாது என்பது தான் அதிகாரவர்க்கத்தின் திட்டம். ஆகவே தான் அவர்களது கூலிப்படைகளான காவல் படைகளை ஏவினர் கடைசி நாளில்.

அந்த ஒரே ஒரு நாள் மட்டும் பொறுத்திருந்தால் சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தந்து தீர்மானம் கையெழுத்தானதும் தாங்களாகவே வெற்றியுடன் கலைந்திருப்பார்கள் மாணவர்கள். ஆனால் அது நடந்துவிடக்கூடாது என்று சதித்திட்டம் தீட்டியவர்கள் தாம் தங்கள் கைகளாலேயே குடிசைகளை,வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு மாணவர்கள் மேல் பழிசுமத்தப்பார்த்தனர். தாங்களே குடியிருப்புகளையும் உடைமைகளையும் அடித்து நொறுக்கினர். பெண்கள் குழந்தைகள் என்று யாரையும் பாராது தங்களது கொடுங்கோல்களால் அடித்து விளாசினர்.

இப்படியாக மிக அருமையாக அறவழியில் முடிந்திருக்க வேண்டிய ஒரு மாபெரும் எழுச்சிப் போராட்டம், வன்முறையாக முடித்து வைக்கப்பட்டது..

ஆனாலும், இளைஞர்களிடத்தில் இன்னும் அந்தத் தீவிரம் இருக்கிறது. இனிவரும் காலங்களில் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக, அரசின் மெத்தனப் போக்குக்கு எதிராக, சுரண்டல்களுக்கு எதிராக, இளைஞர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

கொலுசு மின்னிதழில் வாசிக்க : 

இளைஞர்களின் காலம்

வியாழன், 9 பிப்ரவரி, 2017

கசக்கி எறியப்படும் நந்தினிகள் ஹாசினிகள்

சென்ற வாரத்தில் கட்செவியஞ்சலில் கீழ்க்காணும் புகைப்படம் வந்தது. தேதி மற்ற விவரங்கள் இல்லாததால் இது வழக்கம் போல ஏதோ பழைய செய்தியைப் பரப்புகிறார்கள் என்று நினைத்தேன். . முகநூலிலும் நண்பர்களின் பதிவைப் பார்த்துவிட்டு உண்மைதான் என்று தெரிந்ததும் நண்பர்களுக்குப் பகிர்ந்தேன்.

இப்படி இருக்க ஹாசினி இப்போது உயிருடன் இல்லை என்ற பதிவைப் பார்க்கும் போது பதை பதைக்கிறது மனது.

கீழ்க்காணும் பதிவு முகநூலில் Zabi Zabi அவர்களின் பதிவு. அவர் ஹாசினியைத் தெரிந்தவர். பக்கத்தில் வசிப்பவர்.

நான்கு நாட்களாக தேடப்பட்டு வந்த 7 வயது பெண்குழந்தை ஹாசினி இன்று எரிந்த நிலையில் தாம்ப்ரம் பை பாஸ் சாலையில் கண்டெடுக்கப்பட்டார்
ஹாசினியின் அப்பார்ட்மெண்டில் பக்கத்து வீட்டுக்காரராக குடியிருந்த ஒரு நாதாரி ஜஸ்வந்த் என்பவன் தான் குழந்தையை கடத்தி எரித்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஜஸ்வந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவனுடைய தூக்கு தண்டனைக்காக குரல் கொடுக்க வேண்டியது நம் அனைவர் மீதான தார்மீக கடமையாக உள்ளது
அந்த நாயை காவலர்கள் இழுத்து வந்த போது முதல் அடி என்னுடையதாக விழுந்தது என்பதை ஹாசினிக்காக நான் செய்த சிறு முன் மாதிரியாக நினைக்கின்றேன் இனி எந்த பெண் குழந்தைக்கும் இம்மாதிரியான துயரம் நேராது இருக்க அவன் தூக்கில் தொங்கும் வரை இதை சும்மா விட மாட்டேன்
ஹாசினியின் வீட்டில் இருந்தே இதை போஸ்ட் செய்கிறேன்.. ஹாசினிக்காக குரல் கொடுப்போம்..


ஹாசினி வெறும் ஏழு வயதேயான சிறுமி, அவளிடம் காமம் கொண்டு வேட்டையாடிக் கொன்று எரித்தும் இருக்கிறான் அயோக்கியன். நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறது. பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும் ?

சமீபத்தில் 16 வயதேயான தலித் சிறுமி நந்தினியின் கொலையையும் படித்து மனம் நொந்து போயிருந்தேன்.
தொடர்புடைய படம்

அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 16 வயது நந்தினி, டிசம்பர் 26 அன்று காணாமல்போனார். புகாரை போலீஸார் அலட்சியமாகக் கையாண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் தந்த அழுத்தத்தின் விளைவாக நடவடிக்கைகள் தொடங்கி, ஜனவரி 14 அன்று கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து நிர்வாண நிலையில் இந்தச் சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது.

கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் நந்தினியும் காதலித்ததாகவும் விளைவாக, நந்தினி கருவுற்றதாகவும் திருமணத்துக்கு அவர் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், நந்தினியைத் தன்னுடைய பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் பழகிய மணிகண்டன், தனது நண்பர்கள் மணிவண்ணன், வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகியோருடன் சேர்ந்து அவரைக் கொன்றதாகப் புகார் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நந்தினி கொல்லப்படுவதற்கு முன்பு, கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நான்கு இளைஞர்களும் இப்போது கைதுசெய்யப் பட்டிருக்கிறார்கள்.

நந்தினி காணாமல்போய் 11 நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பதும், 20 நாட்களுக்குப் பிறகுதான் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது என்பதும் 20 நாட்களுக்குப் பிறகுதான் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் காவல் துறையின் அலட்சியப் போக்குக்கு ஓர் உதாரணம். சாதியம் சார்ந்து நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கின்றனவே அன்றி குறையவில்லை.

இப்படியாகவே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கில் நமது சகோதரிகள் , மகள்கள் கடத்தப்படுகிறார்கள், வன்புணரப் படுகிறார்கள், கொலையும் செய்யப்படுகிறார்கள்.

சில நாட்கள் நாமும் புலம்பிவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிவிடுகிறோம்.

அரசும் , அதிகாரிகளும் , குற்றங்களைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் குற்றவாளிகளை நேர்மையாக விசாரித்து தண்டிக்கவும் துப்பில்லை.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைய வேண்டுமென்றால் தண்டனைகள் கடுமையாக வேண்டும் என்பது தான் நம் கண் முன்னர் இருக்கும் ஒரே வழி. அதைத்தான் எதிர் பார்க்கிறோம்...


தூய்மை இந்தியாவாகிக் கொண்டிருக்கும் இந்நாட்டில்
இன்னும் பிஞ்சுப் பூக்கள்
கதறக் கதற நசுக்கி முகரப்படுகிறார்கள்
நெஞ்சம் பதற நாம் அழுது புலம்புகிறோம்
சில காலம்
எதிர்க்குரலில் கத்தித் தீர்க்கிறோம்
சிலகாலம்
குற்றவாளிகளை வசை பாடுகிறோம்
சிலகாலம் 

ஆனால்
நந்தினிகள் ஹாசினிகள்
காலந்தோறும் கசக்கியெறியப் படுகிறார்கள்
ரத்தக்கறை படிந்த இந்த நிலம்
கால வெள்ளத்தில் பூசி மொழுகப்பட்டுவிடுகிறது
மாபாவங்களுக்கும் கூட 
துணை போகும் சட்டம் கொண்டிருக்கும்
சாத்தான்களின் நகரத்தில்
சந்தனமும் பன்னீருமா ஓடப்போகிறது ?
குருதி வாடையைச் சகித்துக்கொண்டே
வாழப் பழகிக் கொள்வோம் இனி