திங்கள், 22 டிசம்பர், 2014

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இருபதாவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்ட இருபதாவது சந்திப்பு நேன்று இனிதே நடந்தது.

படித்ததில் பிடித்தது பகுதியில் தாங்கள் வாசித்த அனுபவங்களை புன்னகை ஜெயக்குமார், ஆனந்தக்குமார் ஆகியோர் பகிர்ந்து கொள்ள , வீராசாமி அவர்களின் சூழலியல் பாடலுடன், தவில் செல்வராஜ் அவர்களின் அதிரும் தவில் இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

இதே நாளில் குரூப் 4 தேர்வு நடப்பதால் வழக்கமாக வரும் சில நண்பர்களும், மாணவர்களும் முந்தைய நாளிலும் அன்றைய காலையிலும் அழைத்து வர முடியாது என்று சொல்ல சொல்ல என் முகம் சுருங்கிக் கொண்டே போனது. நிறையப் பேர் விடுமுறை விண்ணப்பத்தை அளித்துவிட்டார்கள். தேர்வின் காரணமாக வழக்கமாக நடக்கும் பள்ளியை விடுத்து வேறு அரங்கத்தில் நடத்த நேர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் , நமது நண்பர்களில் பலருக்கு பொள்ளாச்சி இலக்கிய வட்ட சந்திப்புக்கு அழைக்க வேண்டியதே இல்லை. சரியாக மூன்றாவது ஞாயிறு அந்தப்பள்ளியின் அந்த அரங்கத்துக்கு அன்புடன் வந்து விடுவார்கள். இந்த முறை அனைவருக்கும் இட மாற்றத்தைச் சொல்லி விட்டோம் என்றாலும், அலை பேசியைத் தவற விட்டுவிட்ட கோகிலா, என் குறுஞ்செய்தியைப் பார்க்க மறந்த வீராசாமி அய்யா, மாணவன் நாகராசு உட்பட ஆறு பேர் அங்கு சென்று எனக்கு அழைத்து என்ன இன்று இலக்கியக் கூட்டம் இல்லையா என்று கேட்டதும் மனம் நெகிழ்ந்தது. அவர்களை அரங்கத்துக்கு வர சொல்லிவிட்டு முதல் வேலையாக அந்தப்பள்ளிக்குச் சென்று அதன் வாசலில் " இன்று இங்கு நடக்க இருந்த பொள்ளாச்சி இலக்கியவட்டம் இடமாற்றம் " என்ற அறிவிப்பை எழுதி ஒட்டிவிட்டு ஓடி வந்தோம்.

அன்போடு எங்களை வழிநடத்தும் வாசுதேவன் அய்யா , சித்ராதேவி அம்மா இருவருக்கும் கண் அறுவை சிகிச்சை. அவர்களும் வர இயலவில்லை. காலை பத்து மணி வரையிலுமே அரங்கில் யாரும் இல்லை. இன்னும் சோகமாகிப் போனேன். சிறப்பு விருந்தினர்களையும் சாப்பிட வைத்து அரங்கத்துக்கு அழைத்து வந்தாகிவிட்டது. இப்போது மொத்தம் பத்து பேர்தான் என்பது என்னை இயங்க விடாமல் அமர வைத்து விட்டது. பத்து பேர் என்பது ஒரு குறையில்லை. பத்து பேர் மட்டுமே இருந்து நடத்தும் கூட்டங்களும் பல இடங்களில் சிறப்பாக நடக்கின்றன. ஆனால் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வேறு. இங்கு வாசகர்கள் ஒருபோதும் ஐம்பது பேருக்கும் குறைந்ததில்லை. நாங்கள் ஒரு குடும்பத்தைப்போல இணைந்து விட்டோம். இந்த ஐம்பது பேரில் குறைந்தபட்சம் முப்பது பேர் வாடிக்கையாக வருபவர்கள். மீதி புதுமுகங்கள்.

இப்படி இருக்க இன்று கூட்டம் மிகக் குறைவாக இருந்தது வருத்தத்தைத் தந்தது. தூரத்திலிருந்து எழுத்தாளர்களை அழைத்து வந்திருக்கிறோம். அவர்களுக்கும் அது ஒரு குறையாகத் தெரியும்.

கோவையிலிருந்து யாழி, அனாமிகா, இலக்கியன் விவேக் வந்துவிட்டார்கள். ஒரு வழியாக இருபது பேருடன் கூட்டத்தை ஆரம்பித்தோம். படித்ததில் பிடித்தது நிகழ்ச்சி தொடங்கும் போதே 11 ஆகிவிட்டது. ஆச்சர்யம், நண்பர்கள் வந்தே விட்டார்கள்...

இம்முறை நிறையப் புது நண்பர்கள், கோவையிலிருந்து கோவை சேது, மகி வனி, செளவி, யுவன் பாலாஜி, உமாபாரதி, போன்ற முகநூல் நண்பர்கள் வந்ததும் மனம் சமாதானமானது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இன்னும் சில நண்பர்கள் வந்து விட, அரங்கம் நிறைந்தது. கூடுதலாக பேராசிரிய நண்பர் ராம்ராஜ் அவர்களின் மாணவிகள் ( சென்ற இலக்கிய சந்திப்பில் கவிதைகளைக் காட்சியாக நடித்துக்காட்டியவர்கள் ) நாகசியாமளா,தாரிணி,தமிழ்ப்பிரியை,காருண்யா,செல்வப்ரியா ஆகியோரும் வந்ததும் உற்சாகமானது

இன்றும் அரங்கம் நிறைந்தது...

கவிஞர் ஸ்டாலின் அவர்கள் எழுதிய வனமிழந்த கதை - கவிதைத் தொகுப்பை கவிஞர் நாணற்காடன் அறிமுகம் செய்து பேசினார். நான் குறித்து வைத்திருந்த கவிதைகளை குறிப்பிட்டுப் பேசினார். பின்னர் கவிஞர் ஸ்டாலின் அவர்களின் ஏற்புரையில் தனது சகோதரர் எழில் அவர்களின் நினைவுகளையும் அவரது கவிதைகளையும் கனத்த மனதுடன் பகிர்ந்து கொண்டார், தமது கவிதைகள் அனுபவத்தின் குறிப்புகள் என்பதைப் பதிவு செய்தார்.

பின்னர், கவிஞர் ஆழி வீரமணி எழுதிய ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை -கவிதைத் தொகுப்பை முன்வைத்து கவிஞர் ந.முத்து பேசினார். ஆழி வீரமணியின் குரல் அடிமைத்தனத்தை, ஆதிக்கத்தை எதிர்க்கும் ஒரு கலகக்காரனின் குரல் என்பதை தனது பாணியில் அற்புதமாகப் பதிவு செய்தார். ஆழி வீரமணியின் ஏற்புரையிலும் அவரது குரல் ஓங்கி ஒலித்தது சுருக்கமாக இருந்தாலும்.

பொள்ளாச்சி இலக்கியவட்ட செய்திமடலை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வெளியிட பூ.சா.கோ மாணவிகள் நாகசியாமளா,செல்வப்ரியா,தமிழ்ப்ரியை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்கள், உடுமலை ப..பொன்னுசாமி அவர்களின் இரு நாவல்கள் குறித்து முதலில் பேசினார், பின்பு சூழலியல் குறித்து நீண்ட நல்ல விளக்கவுரையை அளித்தார்.

பின்னர் ரதிபாலா , சுப்ரபாரதி மணியன் அவர்களின் சுற்றுச் சூழல் கட்டுரைகள் தொகுப்பான மேகவெடிப்பு நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

பின்னர் நடந்த கவியரங்கில் க.ஆனந்தகுமார்,புன்னகை ஜெயக்குமார், யாழி,அனாமிகா,செந்தில் பாலாஜி,கயல்மொழி,சு.நாகராசு, நாகசியாமளா ஆகியோர் கவிதை வாசித்தனர்.

பின்னர் நண்பர்களுடன் உரையாடிவிட்டு, கெளரிகிருஷ்ணாவில் மதிய உணவுண்டுவிட்டுக் கிளம்பி வீட்டுக்கு வந்தால் மணி ஆறு.

இன்றைய நாளை இன்னுமொரு இனிமையான நாளாக்கிய நண்பர்களுக்கு நன்றி.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக