செவ்வாய், 28 அக்டோபர், 2014

கதைகளினூடாகக் கிடைத்த அறிவு

இந்தப் பதிவை நான் ரொம்ப நாளாக எழுத நினைத்து, தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து பின் விட்டுவிட்டேன்.

வா.மணிகண்டன் அவர்களது சமீபத்திய பதிவு ஒன்று எனக்கு இந்த நிகழ்வுகளைக் கிளர்ந்தெழச் செய்தது.உடனே இது குறித்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அடுத்த நாளே அவரும் பதில் அனுப்பி விட்டார். அவரது மடலும் இங்கு இணைப்பில் உள்ளது.அவரும் சொல்லிவிட்டார் எழுத வேண்டும் என்று.


இந்தப் பதிவுக்கு கிரியா ஊக்கி வா.மணிகண்டன் தான்..

கடந்த மே மாதம் முழுக்க எனது நாட்களைக் குழந்தைகளுடனே செலவிட்டேன். அண்ணன் மகள்கள் ஜனனி, நிவேதா, மாமா மகள்கள் அபிதா, செளம்யா அப்புறம் எனது மகள் பாரதி, மற்றும் மச்சான் மகள் இனியா. இவர்கள் மொத்தமாக ஒரு மாதம் என் வீட்டிலேயே இருந்தார்கள். இவர்கள் போக ஒரு வாரத்துக்கு வந்து தங்கியிருந்த ஹரி, தமிழி, சுபாஷ், நந்தினி மற்றும் சிலர்..

இத்தனை பேரையும் பகல் முழுக்க சமாளித்தது வீட்டிலிருந்தவர்கள் பாடென்றாலும் மாலை முதல் இரவு வரை என் பாடு தான். அந்த ஒரு மாதமும் பார்க்க வேண்டுமே என்னை. வழக்கமாக வீட்டுக்கு வர இரவு 8 அல்லது 9 ஆகும். ஆனால் அந்த மாதம் முழுக்க அடித்துப் பிடித்து 6.30 அல்லது 7 க்கு வந்து விடுவேன். வெள்ளிக்கிழமைகளில் எப்போதும் அப்பா, அம்மாவுடன் இருப்பது வழக்கம் ஆனால் அந்த மாதம் முழுக்க அப்படித் தங்கவில்லை. சனி, ஞாயிறுகளிலும் வழக்கம் போலல்லாமல் முழுக்க அவர்களுடனே இருந்தேன்.

மாலைகளில் என்ன செய்வோம்.? இதுதான் பட்டியல்

நான் வரும் நேரத்துக்காக வாசலில் காத்திருப்பார்கள்
வந்ததும் உற்சாகமாகக் கட்டிக் கொண்டு வரவேற்பார்கள்
வாங்கி வந்த தின்பண்டங்களை ருசித்துவிட்டுப் பின்...

தினமும் ஐந்து திருக்குறள் ஒப்புவித்து, எழுதிக் காட்டிவிடுவார்கள்
பின்னர்
ஒரு மணி நேரம் நல்ல விளையாட்டு.

எல்லாம் நான் சிறு வயதில் விளையாண்ட விளையாட்டுகள் மற்றும் இப்போது அவர்கள் விளையாடும் எளிமையான விளையாட்டுகள்
பல்லாங்குழி, தாயம், பச்சைக் குதிரை, கண்ணாமூச்சி, நொண்டி, கொல கொலயா முந்திரிக்கா, ட்ரிங்,ட்ரிங்... எத்தனை விளையாட்டுகள் .. மிகவும் கொண்டாட்டமான நாட்கள் அவை. அது போக அவர்கள் சில எளிமையான சின்னச் சின்ன விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்துவிட்டார்கள்.

உதாரணமாக, ரொம்ப சுமாரான விளையாட்டு தான் கையைப் பிடித்துக் கொள்வார்கள் " ஹெல்லோ மிஸ்டர் இனியா ( இனியாவும் மிஸ்டர் தான் அவர்களுக்கு) உனக்கு என்ன காய்ச்சலா, வாங்கித் தரேன் விக்ஸ், கையை விடுடா நான்சென்ஸ்..” என்னவோ இது எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. இதையே கொஞ்ச காலம் சொல்லித் திரிந்தேன் பார்க்கும் நெருக்கமானவர்களிடமெல்லாம். நிறையப் பேர் கிண்டலடித்து விட்டார்கள்.

இனியா என்னிடம் இதைச் சொன்னது இன்னும் சுவாரஸ்யம். “ ஹெல்லோ மிஸ்டர் பூபால், உங்களுக்கு என்ன காய்ச்சலா, வாங்கித் தரேன் விக்ஸ், கைய விடுடா நான்சென்ஸ் ( உள்ளிருந்து ஒரு குரல் " இனியா , மாமாவ மரியாதை இல்லாமப் பேசக் கூடாது" ) சரிங்க அத்தை. கைய விடுங்க மாமா நான்சென்ஸ். நான்சென்ஸ் எல்லாம் அவர்களுக்கு மரியாதை இல்லாத வார்த்தை இல்லை...

பின்பு, இரவு உணவு. அத்தனை பேரும் வட்டமாக வாசலில் அமர்ந்து உண்போம் குதூகலமாக. இரவு உணவுக்குப் பின்னர், ஆரம்பமாகும் நிகழ்வில் கதை சொல்லல், பாடல், விடுகதை, பொது அறிவுத் தகவல்கள் எனப் பிரித்துக் கொள்வேம். அவர்களுக்காகவே தேடித் தேடி கதை சொல்வேன். தினமும் பாரதிக்குக் கதை சொல்லும் அனுபவமும் கை கொடுத்தது.

என்னிடம் ஒரு வழக்கம், வழக்கமான கதைகளையே சொல்லி அதன் முடிவை மட்டும் எனது பாணியில் மாற்றிச் சொல்வது, உதாரணத்துக்கு பாட்டி வடை சுட்ட கதையின் முடிவில் காகம் ஏமாந்து வடையைக் கீழே விடும் தருணம் வேறொரு காகம் வந்து அதை நரிக்குக் கிடைக்காமல் கவ்விக் கொண்டு ஓடிப் போய் பாட்டியிடமே கொடுத்து விடும், அதன் அறிவுரையின் பேரில் இரண்டு காகங்களும் பாட்டிக்கு சுள்ளிகள் பொறுக்கிப் போட்டு பாட்டியிடம் உணவுண்டு உழைத்து வாழும்.

விறகு வெட்டிக் கதையில் மூன்று கோடாரிகளையும் ஆற்றிலிருந்து எடுத்த வன தேவதை, மூன்றையும் அவனுக்குத் தராமல் மரம் வெட்டுவது தவறு. வீட்டுக்குப் போ உனக்காக உன் வீட்டில் ஒரு மளிகைக் கடை உருவாக்கி வைத்திருக்கிறேன் அதை வைத்துப் பிழைத்துக் கொள் என்று சொல்லும். இது போன்ற கதைகளை சுவாரஸ்யமாகக் கேட்பார்கள், அது சொல்லும் நீதியை அவர்களாகவே சொல்லுவார்கள்.

கதைகள் அவர்களது கற்பனைகளின் வாசல்களைத் திறந்து விடுகின்றன, அப்பத்தாவின் கதைகள் தான் எனது சிறு வயதுக் கற்பனைகளின் ஊற்று.

சரி, வெறும் கதைகள் மட்டும் போதுமா இந்தக் காலக் குழந்தைகளுக்கு.? இந்தக் காலக் குழந்தைகள் இயல்பிலேயெ அறிவில் முதிர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வெறும் கதைகள் மட்டுமல்லாது நிறைய அறிவியல் உண்மைகள் தேவைப்படுகின்றன. அவர்கள் நாம் குழந்தையாய் இருக்கும் போது தெரிந்து வைத்திருந்தவற்றை விட அதிகமாக, அல்லது வளர்ந்த பிறகும் நாம் தெரிந்து வைத்திருப்பதை விட அபரிமிதமான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

பொது அறிவுத் தகவல்களைச் சொல்லித் தரும்போது நிறைய அறிவியல் தகவல்களையும் விளையாட்டாகச் சொல்லித் தருவேன். ஒருமுறை , நிலாவில் பாட்டி வடை சுடுகிறாள் என்று ஆரம்பிக்கும் போதே இடைமறித்த மகள் அதெல்லம் பொய், நிலா நமது துணைக்கோள் அங்கு காற்று இல்லை யாரும் வாழ முடியாது என்று சொல்கிறாள். அவள் இரண்டாம் வகுப்பு தான் படிக்கிறாள்.

கிரகணம் பற்றி ஒரு நாள் கேட்டார்கள். படம் வரைந்து அழகாக விளக்கினேன். தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். அவர்களிடம் பாம்பு வந்து விழுங்குகிறது என்ற பப்பெல்லாம் வேகாது இனி. அதே நாளில் ஆர்வ மிகுதியாய் சூரியக் குடும்பத்தைப் படம் வரைந்து விளக்குகிறேன் என்று ஒன்பது கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று சொல்லிக் கொடுத்தேன். பொடணியில் அடித்த மாதிரி உடனடி மறுப்பு வந்தது "இப்ப தான் புளூட்டோ கிரகமே இல்லைனு கண்டு பிடிச்சுட்டாங்கல, அப்படினா எட்டு கோள்கள் தானே" என்று சொன்னவள் நிவேதா ஆறாம் வகுப்பு ஆ பிரிவு. ஆறாம் வகுப்பு மாணவிக்குத் தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிந்திருக்கின்றன.

இன்னும் இன்னும் நிறைய, உண்மையில் அந்த ஒரு மாதமும் அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுத்ததை விடவும், அவர்களுக்காக நான் கற்றுக் கொண்டவையும், அவர்களிடம் நான் கற்றுக் கொண்டவையும் அதிகம். இந்த மாதிரியான உரையாடல்கள் இரவு 1 மணிவரை போகும் தினமும். ஒரு நாளும் அவர்களாக தூக்கம் வருது என்று சொன்னதில்லை. காலையில் அலுவலகம் போக 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று கதை சொல்லித் தூங்க வைப்பேன்.குழந்தைகளுடன் செலவிடும் நேரம் பொன்னானதாக இருக்கிறது.

நண்பர்கள் நிறையப் பேர் குழந்தைகளுக்காகவே இயங்கி வருகிறார்கள், அவர்களும் கதைகளின் முக்கியத்துவத்தை அறிந்து குழந்தைகளுடனான உரையாடலில் கதைகளுடனே தொடர்கிறார்கள். அவர்களிடமும் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். கதைகளின் ஊடாக அறிவியல் உண்மைகளையும் நாம் சொல்லும் போது அது வேறு மாதிரியான திறப்பாக அமைகிறது குழந்தைகளுக்கு. குறிப்பாக வானம் வெங்கட், குமார் ஷா, சக்திவேல், ராமராஜ் போன்ற நண்பர்கள் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். இவர்கள் மலைவாழ் குழந்தைகள் முதல் அனைத்துத் தரப்புக் குழந்தைகளிடமும் செல்கிறார்கள். அடித்தட்டுக் குழந்தைகளுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் மேல்தட்டுக் குழந்தைகள் அளவிற்குப் போய்ச் சேரவில்லை என்பது நான் கண்ட உண்மை. அந்த மாதிரியான குழந்தைகளின் பக்கம் அறிவியலின் உண்மையை ஒளிரச் செய்ய வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. இது உண்மையில் பகுத்தறிவைத் தூண்டிவிடும் ஒரு முயற்சியும் கூட. அதுமட்டுமல்லாமல் வெறும் கிண்டலும் கேலியும் நிறைந்த பொழுது போக்குகள் நிறையவே இருக்கின்றன. தொலைக்காட்சிகளில் முழு நேரமாகக் கூட அவை கிடைக்கின்றன. பிறகு தனியாக நாமும் எதற்கு..?

பள்ளியிலேயே இந்த அறிவியல் அறிவு கற்பிக்கப் படுகிறதே என்று அசட்டையாக நினைக்கலாம். பள்ளிகளில் பாடமாக, அறிவாகவெல்லாமா கற்பிக்கப்படுகிறது.? மதிப்பெண்கள் தான் இலக்கு. அதைத் தவிர வேறெதற்கும் நேரமும் இடமும் இல்லை. இப்படி இருக்க பள்ளிக்கூட அறைகளைத் தாண்டி அவர்களுக்கு பொது அறிவுக்கான கற்குமிடம் தேவை.

அறிவியல் தவிர, அன்றாடம் நாம் எதிர்கொள்கிற பிரச்சினைகளிலிருந்தும் வாழ்க்கைக் கல்வியைத் துவங்கலாம். சிறுவர்கள் மீதான வன்கொடுமை மலிந்து விட்ட காலம் இது. நமது குழந்தைகளுக்கு அதன் புரிதலை எப்படிக் கடத்துவது.? Good Touch, Bad touch என்று அவர்களுக்கு மற்றவர்களின் தொடுகையைப் புரியவைப்பது இன்றியமையாததாகவே கருதுகிறேன். இதன் மூலமும், அவர்களின் குரலை அடக்கி ஒடுக்காமல் காது கொடுத்துக் கேட்பதின் மூலமாகவும் பல பிரச்சினைகளை முளையிலேயே கண்டறியலாம் என்றும் தோன்றுகிறது.

குழந்தைகள், குழந்தைகளாகவே வளர்தல் நல்லது தான். அவர்களது குழந்தைமையைப் பிடுங்கிவிட்டு அவர்களின் மூளையில் பேரறிவை இப்போதே புகுத்திவிடச் சொல்லிவிடவில்லை. நன்றாக விளையாடட்டும், விளையாட்டாகவே , விளையாட்டிலேயே இந்தப் பிரபஞ்சத்தையும் கற்றுக் கொள்ளட்டுமே...