திங்கள், 22 செப்டம்பர், 2014

பொள்ளாச்சி இலக்கியவட்டம் பதினேழாவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் பதினேழாவது சந்திப்பு நேற்று நடந்தது. இன்னுமோர் இனிமையான நாள்.

படித்ததில் பிடித்தது பகுதியில் தாங்கள் படித்த / கேட்ட கவிதைகளையும் சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் கவிஞர் அம்சப்ரியா அவர்களின் வரவேற்புரையை அடுத்து நான் கவிஞர் நிலாரசிகன் அவர்களின் கடலில் வசிக்கும் பறவை தொகுப்பின் வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன்.


அடுத்ததாக தோழன் ராசாவின் இலக்கியப் பணிகள் மற்றும் அவரது சமூகப் பணிகள் அறிமுகத்தை அம்சப்ரியா நிகழ்த்தினார். பின்னர் தோழன் ராசாவின் ஏற்புரை. கவிதைகளை நான்கு சுவர்கள் நிரம்பிய அறையொன்றில் வாசித்துவிட்டு அப்படியே விட்டுப் போய்விடுவதில்லை எனவும் களத்தில் இறங்கி மக்களுடன் மக்களாக அவர்களின் விழிப்புணர்வுக்கும் அடிப்படைத் தேவைகளுக்குமாகப் போராடிக் கொண்டிருப்பதையும் இயல்பாக எடுத்துரைத்தார்.

சு.வேணுகோபால் ஐயா அவர்கள் இரா.முருகவேள் அவர்களின் மிளிர்கல் நாவலை விமர்சனம் செய்து பேசினார். ஆம். நான் எனது வாசிப்பனுபவத்தை மட்டுமே பகிர்கிறேன் எப்போதும். இவர் தான் விமர்சனம் செய்தார். மிளிர்கல் ஏராளமான தகவல் தரவுகளை உள்ளடக்கிய கருத்துப் பெட்டகம், ஆனால் அதை ஒரு நாவலாக ஏற்க முடியவில்லை அதற்கான வடிவத்தில் அது இல்லை என்றும் பேசினார். மேலும் தனக்கு அதன் வடிவத்தின் மேல் தான் அதிருப்தி என்றும் அதன் உள்ளடக்கத்திலும் கருத்துகளிலும் உடன்பாடு என்றே பேசினார். மிளிர்கல் கண்ணகியின் பயணப் பாதையில் உள்ள ஏராளமான தகவல்களை உள்ளடக்கிய நாவல் என்று அதில் குறிப்பிடப்பட்ட சில தகவலகளையும், மேலும் அதில் சொல்லப்படாத பல தகவல்களையும் குறிப்பிட்டுப் பேசி ஆச்சர்யப் படுத்தினார்.

கொஞ்சம் ஆசுவாசமாக்க, தமுஎக தோழர் பாலன் அவர்கள் ஒரு பாடலைப் பாடினார். பின்னர் முருகவேள் தனது ஏற்புரையாற்றினார். தனது ஏற்புரையில் மிகச் சாதுர்யமாக சு.வேணுகோபால் அவர்களின் விமர்சனத்தை எதிர்கொண்டு பேசியவர், நாவல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வடிவத்தையே உடைப்பதாக இருக்கட்டுமே என்று பேசினார். இந்த வடிவத்தில் தான் கவிதை இருக்க வேண்டும் என்ற வரையறையை எல்லாரும் பின்பற்றி இருந்தால் புதுக்கவிதை, நவீன கவிதைகள் எப்படி உருவாகியிருக்கும் என்று முத்தாய்ப்பாகச் சொன்னார். அதானே, எழுத்தாளன் தனது எழுத்துக்களின் மீது முதலில் நம்பிக்கையும், காதலும் கொள்வது இயல்புதான். பாராட்டக் கூடியதும்தான்.

பொள்ளாச்சி இலக்கியவட்டம் சார்பாக ஆசிரியர் புன்னகை ஜெயக்குமார் அவர்களுக்கு சாதனை ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. அரசுப்பள்ளியில் பல நடைமுறைச் சிக்கல்களைக் கடந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக கணினியியல் துறையில் பன்னிரண்டாம் வகுப்பில் நூறு சதவிகிதம் தேர்ச்சியைக் கொண்டு வந்த்தோடு இந்த வருடம் கூடுதலாக ஒரு மாணவியை தமிழகத்திலேயே முதல் முதலாக அரசுப் பள்ளியில் கணினியலில் இருநூற்றுக்கு இரு நூறு மதிப்பெண்கள் எடுக்க வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனது படிகள் அறக்கட்டளை மூலம் தனது சொந்தப் பணத்தில் நிறைய மாணவர்களின் கல்விக்கான உதவித் தொகையைத் தந்திருக்கிறார். இவை போதாதா இவருக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க ..?

அடுத்ததாக தோழன் ராசா அவர்களின் தொடர் இலக்கிய, சமூகப் பணிகளைக் கெளரவிக்கும் பொருட்டு அவருக்கு இலக்கியச் சுடர் விருது வழங்கப்பட்டது.

இந்த முறையைப் போலவே கொஞ்சம் பொருளாதார நிலை ஒத்துழைத்தால், ஒவ்வொரு முறையும் சிறப்பாக இயங்கும் தகுதியானவர்களுக்கு விருதளிக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். இது அவர்களுக்கு நிச்சயம் ஊக்கமாகவும், அடுத்தடுத்த பயணங்களுக்கான உத்வேகத்தையும் தரும் என்றும் நம்புகிறோம்.

அடுத்ததாக, நிலாரசிகன் பேசினார். எப்போதும் நேர்மறை எண்ணங்களை வார்த்தெடுப்பதில் தொடங்கி தனது கவிதைகளின் படிமங்களை அவர் பேசி முடித்ததும் நிறைய கைதட்டல்கள். அய்யா சிவசக்தி ராமசாமி அவருடன் விவாதித்ததும் கூட ஆரோக்யமாகவே அமைந்தது. கவிஞர் பாலுசாமி அவர்கள் கவிதைகளில் படிமங்கள் குறியீடுகள் குறித்து தனது கவிதைப் பயிற்சிப்பட்டறையை செவ்வெனே செய்தார்.

தொடர்ந்து கவியரங்கம், இருபத்தி ஐந்து கவிஞர்கள் தங்களது கவிதைகளை தங்களது குரலில் வாசித்த்து மகிழ்ச்சியான அனுபவம்.
இறுதியாக எனது நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்த்து.

இந்த நாளையும் அற்புதமாக்கித் தந்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் நிறைய அன்பும்..


இந்த இலக்கிய சந்திப்புக்கு முன்பும், பின்பும் நிறைய நெகிழ் சம்பவங்கள் நடந்ததைத் தனியாகப் பதிய வேண்டும். பிறகு…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக