புதன், 20 ஆகஸ்ட், 2014

அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது - கவிதைத் தொகுப்பு வாசிப்பனுபவம்

அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது -  கவிதைத் தொகுப்பை முன்வைத்து.... -இரா.பூபாலன்
               

கவிதைகளின் ஊற்றுக்கண்ணை அடைத்து விட இதுவரையிலும் எந்த சக்திக்கும் திறன் இருந்திருக்கவில்லைநல்ல கவிதைகள் காலம் கடந்தும் வாழும்கவிஞனின் காலம் கடந்தும்.

அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது " - கவித்துவமான இந்தத் தலைப்பைப் பார்த்ததும் நேரடியாக நான் கவிதைகளை வாசித்திருக்கலாம்அந்த முன்னுரையையை வாசித்தது கவிதைத் தொகுப்பை அணுகுவதற்கு ஏதுவாக அமையவில்லைஇந்த கவிதைகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் எழில் விபத்தொன்றில் பறிபோய்விட்டார் என்ற முன்னறிவிப்பை வாசித்து விட்டு கவிதைகளை வாசிக்கும்போது இழப்பின் வலிகள் தொண்டைக்குள் அமர்ந்து கொண்டு கவிதைகளை உட்செலுத்த மறுத்து விடுகின்றன.

முதல் இரன்டு நாட்கள் இப்படியே கழிய கொஞ்சம் இடைவெளிவிட்டு கவிதைப் பக்கங்களிலிருந்து வாசிக்கத்துவங்குகிறேன் மஞ்சள் வெயிலை.

எல்லா விதைகளையும் நாம் தெரிந்தே தான் விதைக்கிறோம்மகசூல் கொஞ்சம் அதிகம் என்றால் நாம் தயங்குவதே இல்லை பூச்செடிகளைக் களைந்துவிட்டு விருப்பமான காய்களையோ கீரையையோ பயிரிட.

நமது சுயலாப நோக்கத்தை நறுக்கெனக் கேட்கிறார் கவிஞர்
                                        …....................
ஆனால் அம்மா,
என்ன நிச்சயம்
மென்னுணர்வுகளை
நசுக்கியுருளும் காலச்சூழலில்
ஓர் நாள்
பூச்செடிகளைக் களைந்தெரிந்து
நீயும்
கீரைகளை விதையிட மாட்டாயென்பது ..?

சர்வ நிச்சயமாக இது காலச்சூழலின் மாற்றத்தில் மனிதம் இறுகிக் கொண்டிருக்கிற மக்களுக்கான ஒரு கவிஞனின் குரல் தான்இந்தக் குரல் தான் காலங்களனைத்திலும் மனிதர்களின் பிறழ்வுகளுக்குப் பின்னால் நின்று கூவிக் கொண்டேயிருக்கிறது.

காதலைக் கொண்டாடியிருக்கும் கவிதைகளிலும் அன்பு நிறைந்து கிடக்கின்றது.

உன் அன்பின் சிறகு
விரியாத வானத்தில்
நான் இறந்த நட்சத்திரமாகின்றேன்


இந்தக் கவிதை ஏதோவொன்றை அடிமனதில் கிளறிவிட்டு விட்டுப் போய்விடுகிறதுகண்சிமிட்ட இயலாமல் எரிபொருள் தீர்ந்த நட்சத்திரமாக ஆகிப்போனவனைக் கற்பனை செய்கிறேன்மீண்டும் அவ்வானத்தில் சிறகுகள் விரியுமா ?

நதியின் மீது தெரியும் நிலவின் பிம்பத்தை எல்லாக் கவிஞர்களுமே கவிதையாக்கிவிட்டிருக்கிறார்கள்தனது மொழியில் இவரது கவிதை அழகியலுடன் தன்னைத் தனித்து விருப்பக்கிறியிட வைக்கிறது

ஒருபோதும்
வரைந்து முடித்திடமுடியாத
உன் சித்திரத்தை
அலையும் நதியின் மீது
காலாதி காலமாய்
தீட்டிக் கொண்டிருக்கிறது நிலா.

நெளியும் நிலவின் பிம்பமெனக் காதலியின் பிம்பமும் கண்களுக்குள் சில விநாடிகள் கொண்டு வந்து சேர்க்கும் இந்தக் கவிதை காட்சிப் படிமமாக மனதினுள் நிறைகிறது.

சிலுவையின்
நெடுக்குச்சட்டம் நான்
குறுக்குச்சட்டம் நீ
கருணையின்
எந்தக் கரங்கள் அறைந்தன
இந்த வாழ்வை நம்மீது.

துன்பத்தில் உழலும் வாழ்வையும் ஆசுவாசமாக்கி விடுகிறது நமது இணைப்பின் கருணை என்பதான இந்தக் கவிதையும் சிலுவையும் புராதானத்து எச்சங்கள்.

ஒரு பறவை
நதியைக் கடப்பது போல
ஒரு நிலவு
இரவைக் கடப்பது போல
ஒரு மரம்
பருவங்களைக் கடப்பது போல
அல்லாமல்
ஒரு பள்ளிச் சிறுவன்
சாலையைக் கடப்பது போல்
இருக்கிறது
இவ்வாழ்வை
நாம் கடப்பது.

உண்மைதான்பறவையைப்போலநிலவைப்போலமரத்தைப்போல இயற்கையோடு இயல்பாக வாழப் பழகியிருக்கவில்லை இவ்வாழ்வை.ஆகவே இதைக் கடப்பது பயம் நிறைந்ததாகவும் யாருடைய கையையாவது பிடித்துக் கொண்டும் கடப்பதாக உள்ளது.

எழிலின் கவிதைகள் இயற்கையின் அழகைகாதலின் அழகை,வாழ்வின் அழகை அகத்தே கொண்டு வாசிப்பின் போது ஒரு புத்துணர்ச்சியைத் தருகின்றன.

இரை தேடி அலைந்த
பறவையின்
சோர்ந்த சிறகுகள் மீதமர்ந்து
கூடு திரும்புகிறது
மாலை நேரத்து வெயில்

இந்தக் கவிதை சிறு வயதில் வயல் வேலைக் களைப்புடன் மாலை வீடு வரும் அம்மாவின் சும்மாட்டுத்துணியில் இருந்த மஞ்சள் மாலை வெயிலை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

அருவி என்ற குழந்தையின் இழப்பை அக்டோபர் மாதத்தின் மழையிரவு கவிதையில் வலிமிகுந்த சொற்களால் எழுதியிருக்கும் இவர்,அருவியின் இழப்புக்குப் பின்னரான கவிதையொன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

உனது மொழிமட்டுமே தெரிந்த
இந்த பொம்மைகளிடம்
யார்
எப்படிச் சொல்லிப் புரியவைப்பது
என்றென்றைக்குமாய்
நீ
திரும்பப் போவதில்லை யென்பதை...


இந்தக் கவிதை வாசித்தவுடன் தனித்து நிராதரவாக விடப்பட்ட பொம்மையாக ஒரு கணம் சலனமற்றுக் கெட்டிப்பட்டு விடுகிறது மனது.


எழிலின் கவிதைகளில் கையாடப்பட்டிருக்கும் சொல்லாடல்களும் கவிதை நேர்த்தியும் நம்மை ஆச்சர்யமூட்டுகின்றனஇவரின் கவிதைகளின் பிரத்யேகத்தன்மை இவை எழுதப்பட்ட காலத்திலிருந்து பதினைந்து வருடங்களின் பின்பு படிக்கும் நமக்கும் இவை புதிய வாசிப்பனுபங்களைத் தருவதுதான்.

யார் யார்க்கோ
என்னென்னவோ நிகழ்ந்துவிட்ட
அதே சாலையில்தான் செல்கிறேன்
எப்போதும்
எனக்கேதும் நிகழ்ந்து விடாதென்ற
குருட்டுத்தனத்துடன்

இந்தக்கவிதையை வாசித்து முடித்த கணம் கனம் கூடிப்போகிறது மனதில்யார் யார்க்கோ என்னென்னவோ ஆகிப்போன சாலைப்பயணத்தில் தான் அந்த யார் யாரோவென்ற பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்ட கவிஞரின் புகைப்படத்தை முன்பக்கம் ஒருமுறை திருப்பிப் பார்த்துக் கொள்கிறேன்.

கவிஞர் எழில் எங்கும் போய்விடவில்லைஇந்தக் கவிதைகளாக,அதன் அன்பும் ஆழமுமான சொற்களாக நம்மிடையே தான் உலவிக்கொண்டிருக்கிறார்அவருடன் கைகுலுக்கி வாழ்த்திக் கொள்கிறேன் அரூபமாக இத்தொகுப்பை முன்னிறுத்திகவிஞர் எழில் அவர்களின் சகோதரர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் எழிலின் கவிதைகளைத் தொகுப்பாக்கி நம் கைகளில் தவழ விட்டமைக்காக.

நன்றி.

விலை உரூ 100/-

வெளியீடு வம்ஸி புக்ஸ்,
19 , டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை - 606 601
தொடர்புக்கு : +91 9444867023

ஆசிரியர் .எழில்

நன்றி :
நந்தலாலா இணைய இதழ்
http://www.nanthalaalaa.com/2014/08/17.html

1 கருத்து:

  1. அன்பும் ஆழமுமான சொற்களில் அருமையாக வாசிப்பனுபவத்தைப்பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_22.html

    பதிலளிநீக்கு