வியாழன், 25 டிசம்பர், 2014

சட்டமும் நீதியும் எளிய மனிதர்களுக்கானது அல்ல

கிரிஜா அம்மா.

கிரிஜா அம்மாவைக் கடந்த நான்கு மாதங்களாகத் தெரியும். நான்குமாதங்களாகத் தொடர்ந்து கோவையிலிருந்து தனியாக பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிகழ்வுக்கு வந்து கலந்து கொள்பவர். ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர். ஒரு பேருந்துப் பயணத்தில் நாகப்பன் என்கிற அதே பள்ளியின் ஆசிரியர் பழக்கமாகி அவர் மூலமாக கிரிஜா அம்மா இலக்கிய வட்டத்துக்கு வரத் தொடங்கினார்

சென்ற ஞாயிறு நடந்த இலக்கியக் கூட்டத்துக்கு நாகப்பன், கிரிஜா அம்மா இருவரும் வரவில்லை. நாகப்பனிடம் கேட்கலாம் என்று அழைத்தேன். அவர் கிரிஜா அம்மாவுக்கு சிறு விபத்து, கையில் அடி. கங்கா மருத்துவமனையில் நான்கு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை முடிந்தது என்றும் சொன்னார். பதறிவிட்டேன். வயதானவர், சர்க்கரை நோயாளி வேறு என்று. நேற்று மாலை அவரைப்பார்க்கலாமென மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.

கடந்தவாரம் பள்ளி வேலைகள் முடிந்து மாலை நேரமாகி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். சாலையோரத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது ஒருவன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து நிலை தடுமாறி மோதிவிட்டான். அவன் நிலையிலேயே இல்லை. கடும் போதையாம். இடித்துவிட்டு எழுந்து என்ன ஆச்சு என்று கேட்டானாம். இவருக்குக் கையில் பலத்த அடி கை எலும்பு துருத்திக் கொண்டு வெளியில் தெரியுமளவிற்கு பலத்த அடி. அப்படியே பக்கத்திலிருந்த காவல் நிலையத்தில் தான் முதலில் புகார் செய்திருக்கிறார். அதற்குள் இவருடன் பணிபுரியும் ஆசிரியர்களும் காவலர்களும் வந்து விட்டனர்.

கொஞ்ச நேரத்தில் காவல்நிலையத்தில் அழைத்து விசாரிப்புக்குப் பின் அவனை அனுப்ப முடிவு செய்து , நீங்க போங்க நாங்க பாத்துக்கறோம் என்று சொல்லிவிட்டார்களாம்.. காரணம் அவன் அமைச்சரின் உறவினன் என்றாம். அந்த அமைச்சர் மீது எனக்குக் கொஞ்சம் மரியாதை இருந்தது. ஒரு நண்பனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு எளிமையாக வந்திருந்தார். அப்போது நண்பன் என்னிடம் சொன்னபடி நிறைய எளிய மனிதர்களுக்கு உதவும் குணம் கொண்டவராம். இவன் அவரது பெயரைச் சொல்லித் தப்பிக்கிறான். இதைக்கேள்விப்பட்டதும் அங்கிருந்த ஆசிரியர்கள் கத்தி கூச்சலிட்டு FIR போட வைத்திருக்கிறார்கள். அப்படியே ஆனாலும், பெரிய அளவில் சேதமோ, உயிரிழப்போ இல்லாததால் அதிகபட்சம் கொஞ்சம் அதாவது 5000 ரூபாய்க்குள் அபராதம் கிடைக்கும் என்கிறார்கள்.

கிரிஜா அம்மாவை மருத்துவமனையில் பார்க்கும் போது கண் கலங்கினார். அவருக்கு சொந்தம் என்று யாருமே இல்லை, பத்தாம் வகுப்புப் படிக்கும் ஒரே மகன். அவனுக்குத் தேர்வு இப்போது. எனவே பக்கத்தில் நண்பர் வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

இதுவரை ஒரு லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இவரிடம் கொஞ்சம் கூட பணம் இல்லை. பள்ளி நிர்வாகம் தான் செலவு செய்து பார்க்கிறது என்றார். எப்படியானாலும் அந்தப் பணத்தை திரும்ப பணிக்கு வந்து கட்டியாக வேண்டும். இவருக்கு குணமாக, இன்னும் முன்று மாதங்கள் ஆகிவிடும். கையில் 6 போல்ட்டு மற்றும் நட் வைத்திருக்கிறார்கள். இருபது நாட்கள் படுக்கையிலேயே இருக்க வேண்டும். இவர் மருத்துவமனையிலிருந்த நாட்களில் கூட உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் தான் தினம் ஒருவராக இரவும் பகலும் உடன் தங்கி கவனித்துக் கொண்டுள்ளார்கள். இருபது நாட்களும் தூரத்து உறவு ஒருவர் வீட்டில் தங்கச் சொல்லியிருக்கிறார்கள். இந்த விபத்து இவரது வாழ்க்கையை அடியோடு மாற்றுகிறது எனக் கண்கலங்குகிறார்..

மிகவும் வேதனையாக இருக்கிறது. சட்டம் எத்தனை ஓட்டைகளைக் கொண்டுள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உள் நுழைந்து வெளி வரலாம் என்பது எத்தனை நகைப்புக்குரியது.

எளிய மனிதர்கள் வேறு எங்கு போவது நியாயம் வேண்டி.?

கிளம்பும் போது கிரிஜா அம்மா சொன்னார். இலக்கிய வட்டத்துக்கான உங்கள் குறுஞ்செய்தி வந்தபோது நாகப்பனிடம் சொன்னேன் " சே, கை நல்லா இருந்திருந்தா இந்நேரம் பொள்ளாச்சில இருந்திருப்போம்ல " என்று , மேலும் " அடுத்த மாதம் யாருங்க சிறப்பு விருந்தினர் ? கவலைப்படாதீர்கள் அடுத்த மாத இலக்கிய வட்டத்துக்கு வந்துடுவேன் " என்று. கண்கள் கலங்கின. அதற்குமேல் அங்கு இருக்க முடியவில்லை சீக்கிரம் குணமாகி வாங்கம்மா போதும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டேன்.

வாழ்க நமது சட்டமும், அதை தம் இஷ்டத்துக்கு வளைத்து ஒடிக்கும் அரசியல்வாதிகளும் பெரியமனிதர்களும்.

எளிய மனிதர்களே உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு ஓட்டு போட்டுவிட்டு நாம் அவர்களிடம் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம். அந்த ஒரே ஒரு ஓட்டுக்கு அவர்கள் நம் காலடியில் கிடந்த நாடகத்தை கணக்கில் கொள்ளவும் வேண்டாம்.

அரசியல்வாதிகளின் அடிப்பொடிகள் கூட அவரது நிழலில் இருந்துகொண்டு இந்தச் சமூகத்தையே சித்ரவதை செய்துகொண்டிருக்கிறார்கள். யார் மாற்றுவது ..?


மின்சாரம் அது மின்சாரம் ...

மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் குருடம்பாளையம் ஊராட்சியில் மட்டும் மின்னுகிறது சூரியசக்தி மின் விளக்கு.

மகிழ்ச்சியாக இருக்கிறது, பெருகி வரும் மின் தேவையிலும், குறைவாக இருக்கும் ( குறையாகவும்) மின் உற்பத்தியிலும் மாற்று எரிசக்தி என்று சொல்லப்படுகிற Renewable Energy Sources ல் மிக முக்கியமான சூரிய ஒளியைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் அத்தியாவசியமானது. சூரிய ஒளி தீர்ந்துவிடவா போகிறது..?

குருடம்பாளையம் ஊராட்சி இந்த விஷயத்தில் கோவைக்கு முன்னுதாரணம். மற்ற எல்லா தெரு விளக்குகளும், நெடுஞ்சாலை விளக்குகளும் சூரிய சக்தியில் இயங்க ஆரம்பித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும்.? மின்சக்தி நிறைய சேமிப்பாகும், பராமரிப்பு செலவொன்றும் பெரிய அளவில் இருக்காது. மின்கலன்களை மட்டும் முறையாகப் பராமரித்தால் போதும்.

சில நாட்கள் முன்பு டெல்லியிலிருந்து அலுவல் நிமித்தம் வாடிக்கையாளர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் பேசியது சுவாரஸ்யம். காரில் போகும் போது இந்த சூரிய சக்தி மின்விளக்கைக் காட்டிப்பேசும் போது அவர் சொன்ன சம்பவம் அதிர்ச்சியடைய வைத்தது.

அவர் ஊரில் கோடைக்காலம் கொடுமையாக இருக்குமாம், கிட்டத்தட்ட 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை போகுமாம். அப்படி வெயிலின் உக்கிரம் தீவிரத்தைக் காட்டும்போது ட்ரான்ஸ்ஃபார்மர்கள் செயலிழந்து விடுகின்றன. எனவே மின் வினியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இது பலநாட்கள் தொடரும் என்கிறார்.

ஒரு முறை பத்து நாட்களாக அவ்வூரில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டதால், பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாத நிலையில் மக்கள் கொதித்துப் போய் மின்சார வாரியத்தை முற்றுகையிட்டிருக்கிறார்கள்.. கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் கூடிவிட்டார்கள் என்றார். மின்வாரிய உயரதிகாரிகள் வந்து விசயத்தை விசாரித்தார்களாம்.

முழு விபரத்தையும் பொறுமையாகக் கேட்ட அதிகாரிகள் சரி, நீங்கள் இந்த முறையீட்டை அப்படியே எழுத்தில் எழுதிக் கொடுங்கள் மேலும் அந்த முறையீட்டுடன் நீங்கள் கடைசியாகக் கட்டிய மின்கட்டண ரசீதையும் இணையுங்கள் நீங்கள் மின்வாரியத்துக்கு பணம் செலுத்துகிறீர்கள் உங்கள் குறைகளைக் களைய வேண்டியது எங்கள் கடமை என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கு ஒரு ஆள் கூட இல்லையாம்.

இங்குதான் நிறுத்தினார். வியப்பாக ஏன் என்றேன்.

அந்த ஊர் நல்லவங்க மின்கட்டணம் கட்டி பல வருடங்கள் ஆகின்றனவாம், மின் கட்டணம், அபராதம் எல்லாம் சேர்த்தால் ஆளுக்கு பல லட்சங்கள் கணக்கு வருமாம்.

அதிர்ந்து விட்டேன். அவர் சொன்ன தொனியைக் கேட்டதும் அப்படி சிரிப்பு வந்து விட்டது. பின்பு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது.

அவரது இந்தத் தகவல் அதிர்ச்சியாக இருந்தாலும், அவருக்கு நம்மவர்கள் தந்தது இன்னும் சிறப்பு. கோவை அழகான ஊர், மக்கள் பண்பானவர்கள் என்றெல்லாம் சொன்னார். தமிழ் தனக்குப் பிடித்த மொழி என்று அவர் சொன்ன போது பெருமையாக இருந்தது. தமிழில் சில வார்த்தைகள் தெரியுமென்றும் சொன்னார். என்னென்ன வார்த்தைகள் தெரியுமெனக் கேட்டேன். வணக்கம், சாப்பிடுங்க என்று மெளன ராகம் சர்தார்ஜி போல சொன்னார். ரேவதியைப்போல யாரோ சொல்லிக் கொடுத்திருக்ககூடும். மேலும் அவர் சொன்ன வார்த்தையில் தான் அதிர்ந்து விட்டேன். தமிழில் நான் வெறுக்கும் மிக மோசமான கெட்ட வார்த்தையைச் சொன்னார். அதிர்ச்சியுடன் இது மிகக் கேவலமான வார்த்தை யார் சொல்லித்தந்தது எனக் கேட்டேன். சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் சொல்லிக் கொடுத்ததாம். அந்த ஓட்டுநர் யாரோ குறுக்கே வந்த போது நடந்த சண்டையில் திட்டினாராம் இந்த வார்த்தையில். இவர் இது என்ன வார்த்தை , பணம் பாக்கி தர வேண்டிய இவருக்குக் கீழே இருக்கும் விற்பனையாளர்களைத் திட்ட இந்த வார்த்தையை உபயோகித்துக் கொள்ளலாம் என்று ஓட்டுநரிடம் கேட்டதற்கு விரிவாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

தயவுசெய்து இந்த வார்த்தையை உபயோகிக்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டு அவரை வழியனுப்பி வைத்தேன்.


இவருடன் ஒரு மூன்றுநட்சத்திர உணவகத்துக்கு உணவருந்தச் சென்றிருந்தேன். அன்றைக்கு இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் அங்கு உணவருந்த வந்திருந்தார்கள். உணவுக்குப்பின் நம்மாட்கள் வெளியில் புகைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த வெளிநாட்டுப் பெண்கள் இவர்களை விட நீளமான வெண்குழல்வர்த்தியை எடுத்துப் புகைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நம்மாட்கள், என்ன கலாச்சாரம் இது பெண்களும் புகைக்கிறார்கள் என்று புகைந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அவர்கள் புகைத்து முடித்த மிச்சத் துண்டை எங்கு வீசுவது எனத் தேடிக்கொண்டிருந்தார்கள். காரணம் அங்கு குப்பைத் தொட்டியே இல்லை. நம்மாட்களோ காலுக்கடியில் போட்டு ஏற்கெனவே நசுக்கியிருந்தார்கள். வாயிற்காப்பாளர் ஓடி வந்து இங்கேயே ஓரமாகப் போட்டுவிடுங்கள் சுத்தம் செய்பவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்லியும் கேட்கவில்லை, அவர்கள் கேட்டும் கொடுக்கவில்லை. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் நெடுந்தூரம் உள்ளே நடந்து உணவறைக்கு வெளியே இருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டே வந்தார்கள். நம்மவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

# கெட்டதுலயும் நல்லது இருந்தா கத்துக்க வேண்டியதுதானே ..? நல்லதைமட்டும் ….


திங்கள், 22 டிசம்பர், 2014

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இருபதாவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்ட இருபதாவது சந்திப்பு நேன்று இனிதே நடந்தது.

படித்ததில் பிடித்தது பகுதியில் தாங்கள் வாசித்த அனுபவங்களை புன்னகை ஜெயக்குமார், ஆனந்தக்குமார் ஆகியோர் பகிர்ந்து கொள்ள , வீராசாமி அவர்களின் சூழலியல் பாடலுடன், தவில் செல்வராஜ் அவர்களின் அதிரும் தவில் இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

இதே நாளில் குரூப் 4 தேர்வு நடப்பதால் வழக்கமாக வரும் சில நண்பர்களும், மாணவர்களும் முந்தைய நாளிலும் அன்றைய காலையிலும் அழைத்து வர முடியாது என்று சொல்ல சொல்ல என் முகம் சுருங்கிக் கொண்டே போனது. நிறையப் பேர் விடுமுறை விண்ணப்பத்தை அளித்துவிட்டார்கள். தேர்வின் காரணமாக வழக்கமாக நடக்கும் பள்ளியை விடுத்து வேறு அரங்கத்தில் நடத்த நேர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் , நமது நண்பர்களில் பலருக்கு பொள்ளாச்சி இலக்கிய வட்ட சந்திப்புக்கு அழைக்க வேண்டியதே இல்லை. சரியாக மூன்றாவது ஞாயிறு அந்தப்பள்ளியின் அந்த அரங்கத்துக்கு அன்புடன் வந்து விடுவார்கள். இந்த முறை அனைவருக்கும் இட மாற்றத்தைச் சொல்லி விட்டோம் என்றாலும், அலை பேசியைத் தவற விட்டுவிட்ட கோகிலா, என் குறுஞ்செய்தியைப் பார்க்க மறந்த வீராசாமி அய்யா, மாணவன் நாகராசு உட்பட ஆறு பேர் அங்கு சென்று எனக்கு அழைத்து என்ன இன்று இலக்கியக் கூட்டம் இல்லையா என்று கேட்டதும் மனம் நெகிழ்ந்தது. அவர்களை அரங்கத்துக்கு வர சொல்லிவிட்டு முதல் வேலையாக அந்தப்பள்ளிக்குச் சென்று அதன் வாசலில் " இன்று இங்கு நடக்க இருந்த பொள்ளாச்சி இலக்கியவட்டம் இடமாற்றம் " என்ற அறிவிப்பை எழுதி ஒட்டிவிட்டு ஓடி வந்தோம்.

அன்போடு எங்களை வழிநடத்தும் வாசுதேவன் அய்யா , சித்ராதேவி அம்மா இருவருக்கும் கண் அறுவை சிகிச்சை. அவர்களும் வர இயலவில்லை. காலை பத்து மணி வரையிலுமே அரங்கில் யாரும் இல்லை. இன்னும் சோகமாகிப் போனேன். சிறப்பு விருந்தினர்களையும் சாப்பிட வைத்து அரங்கத்துக்கு அழைத்து வந்தாகிவிட்டது. இப்போது மொத்தம் பத்து பேர்தான் என்பது என்னை இயங்க விடாமல் அமர வைத்து விட்டது. பத்து பேர் என்பது ஒரு குறையில்லை. பத்து பேர் மட்டுமே இருந்து நடத்தும் கூட்டங்களும் பல இடங்களில் சிறப்பாக நடக்கின்றன. ஆனால் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வேறு. இங்கு வாசகர்கள் ஒருபோதும் ஐம்பது பேருக்கும் குறைந்ததில்லை. நாங்கள் ஒரு குடும்பத்தைப்போல இணைந்து விட்டோம். இந்த ஐம்பது பேரில் குறைந்தபட்சம் முப்பது பேர் வாடிக்கையாக வருபவர்கள். மீதி புதுமுகங்கள்.

இப்படி இருக்க இன்று கூட்டம் மிகக் குறைவாக இருந்தது வருத்தத்தைத் தந்தது. தூரத்திலிருந்து எழுத்தாளர்களை அழைத்து வந்திருக்கிறோம். அவர்களுக்கும் அது ஒரு குறையாகத் தெரியும்.

கோவையிலிருந்து யாழி, அனாமிகா, இலக்கியன் விவேக் வந்துவிட்டார்கள். ஒரு வழியாக இருபது பேருடன் கூட்டத்தை ஆரம்பித்தோம். படித்ததில் பிடித்தது நிகழ்ச்சி தொடங்கும் போதே 11 ஆகிவிட்டது. ஆச்சர்யம், நண்பர்கள் வந்தே விட்டார்கள்...

இம்முறை நிறையப் புது நண்பர்கள், கோவையிலிருந்து கோவை சேது, மகி வனி, செளவி, யுவன் பாலாஜி, உமாபாரதி, போன்ற முகநூல் நண்பர்கள் வந்ததும் மனம் சமாதானமானது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இன்னும் சில நண்பர்கள் வந்து விட, அரங்கம் நிறைந்தது. கூடுதலாக பேராசிரிய நண்பர் ராம்ராஜ் அவர்களின் மாணவிகள் ( சென்ற இலக்கிய சந்திப்பில் கவிதைகளைக் காட்சியாக நடித்துக்காட்டியவர்கள் ) நாகசியாமளா,தாரிணி,தமிழ்ப்பிரியை,காருண்யா,செல்வப்ரியா ஆகியோரும் வந்ததும் உற்சாகமானது

இன்றும் அரங்கம் நிறைந்தது...

கவிஞர் ஸ்டாலின் அவர்கள் எழுதிய வனமிழந்த கதை - கவிதைத் தொகுப்பை கவிஞர் நாணற்காடன் அறிமுகம் செய்து பேசினார். நான் குறித்து வைத்திருந்த கவிதைகளை குறிப்பிட்டுப் பேசினார். பின்னர் கவிஞர் ஸ்டாலின் அவர்களின் ஏற்புரையில் தனது சகோதரர் எழில் அவர்களின் நினைவுகளையும் அவரது கவிதைகளையும் கனத்த மனதுடன் பகிர்ந்து கொண்டார், தமது கவிதைகள் அனுபவத்தின் குறிப்புகள் என்பதைப் பதிவு செய்தார்.

பின்னர், கவிஞர் ஆழி வீரமணி எழுதிய ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை -கவிதைத் தொகுப்பை முன்வைத்து கவிஞர் ந.முத்து பேசினார். ஆழி வீரமணியின் குரல் அடிமைத்தனத்தை, ஆதிக்கத்தை எதிர்க்கும் ஒரு கலகக்காரனின் குரல் என்பதை தனது பாணியில் அற்புதமாகப் பதிவு செய்தார். ஆழி வீரமணியின் ஏற்புரையிலும் அவரது குரல் ஓங்கி ஒலித்தது சுருக்கமாக இருந்தாலும்.

பொள்ளாச்சி இலக்கியவட்ட செய்திமடலை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வெளியிட பூ.சா.கோ மாணவிகள் நாகசியாமளா,செல்வப்ரியா,தமிழ்ப்ரியை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்கள், உடுமலை ப..பொன்னுசாமி அவர்களின் இரு நாவல்கள் குறித்து முதலில் பேசினார், பின்பு சூழலியல் குறித்து நீண்ட நல்ல விளக்கவுரையை அளித்தார்.

பின்னர் ரதிபாலா , சுப்ரபாரதி மணியன் அவர்களின் சுற்றுச் சூழல் கட்டுரைகள் தொகுப்பான மேகவெடிப்பு நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

பின்னர் நடந்த கவியரங்கில் க.ஆனந்தகுமார்,புன்னகை ஜெயக்குமார், யாழி,அனாமிகா,செந்தில் பாலாஜி,கயல்மொழி,சு.நாகராசு, நாகசியாமளா ஆகியோர் கவிதை வாசித்தனர்.

பின்னர் நண்பர்களுடன் உரையாடிவிட்டு, கெளரிகிருஷ்ணாவில் மதிய உணவுண்டுவிட்டுக் கிளம்பி வீட்டுக்கு வந்தால் மணி ஆறு.

இன்றைய நாளை இன்னுமொரு இனிமையான நாளாக்கிய நண்பர்களுக்கு நன்றி.










திங்கள், 17 நவம்பர், 2014

கோடிக் கணக்கில் கொன்று குவிக்கப்படுகிறார்கள் குழந்தைகள்...

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடி முடித்த கையோடு இந்த அதிர்ச்சியான தகவல்கள் நம் அடிவயிற்றில் நெருப்பள்ளிப் போடும்...

தர்மபுரி அரசு மருத்துவமனையில் இது வரை ஒன்பது பச்சிளம் குழந்தைகள் காரணம் தெரியாமல் இறந்திருக்கின்றனர்.. இந்த நிமிடம் வரை அரசு தரப்பிலிருந்து பெரிதாக யாரும் இதைப் பற்றிப் பேசவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை என்பது மழலைகளின் மரணத்தை விடவும் வேதனையானதல்லவா. இந்நேரம் , தமிழ் நாட்டின் முக்கிய குழந்தைகள் மருத்துவர்களின், ஆய்வர்களின் குழு அங்கு குவிந்திருக்க வேண்டாமா. Root cause எனப்படும் அடிப்படைக் காரணத்தைச் சரியாக உடனடியாகக் கண்டுபிடித்து அதைச் சரி செய்வதின் மூலம் மேலும் பல மரணங்களை உடனடியாகத் தடுத்துவிட வேண்டும் அல்லவா. அதை விடுத்து, அறிக்கை விடுவதும், கடிதம் அனுப்புவதும், ஜால்ரா தட்டிக் கொண்டும் என அரசு படு மோசமான மெத்தனத்துடன் இருப்பது ஒரு வித அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. பெரிய தனியார் மருத்துவமனைகளில் பார்க்க வசதியில்லாதவர்கள் ( சிறிய மருத்துவமனைகளில் கூட பிரசவம் பார்க்க சொத்தில் பாதியை விற்க வேண்டும் என்பது தனிக் கதை ) அரசு மருத்துவமனைகளை நம்பி வருகிறார்கள். குழந்தைகளை இழந்துவிட்டு, அதற்கான காரணமும் தெரியாமல் பரிதவித்து நிற்கும் ஏழைப் பெற்றோர்களுக்கு என்ன பதில் இருக்கிறது அலட்சியமான அரசு மருத்துவர்களிடமும் அரசிடமும்..?

குழந்தைகள் பிறந்து இறந்தது பெரிய சோகம் எனில், பிறப்பதற்கும் முன்பே குழந்தைகளை நாம் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர கீழ்க்கண்ட செய்தியை வாசித்துவிட்டு வாருங்கள்...



ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ஒண்ணே கால் கோடி சிசுக்களை நசுக்கி அழிக்கிறோம் என்பதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

எனக்கு நிறையத் தம்பதிகளைத் தெரியும், ஒரே ஒரு குழந்தையின்றி திருமணமாகி பல ஆண்டுகளாகியும் அழுது, தொழுது ஆற்றிக் கொண்டிருப்பவர்களை.

ஒவ்வொரு மாதமும் மாத விலக்கு ஆன நாளின் இரவில் தனியறையில் கதறி அழும் மனைவியையும் அவளைத் தேற்ற முடியாமல் சமயங்களில் கூட அழுதும், விரக்தியாகிக் கத்தியும் ஆற்றாமல் இருக்கும் கணவர்களையும் தெரியும்.


இவர்கள் குழந்தை வரம் வேண்டிப் போகும் மருத்துவமனைகளில் தான் இவர்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் கருவிலேயே குழந்தைகளைக் கொலை செய்யச் சொல்லி மனுப்போட்டுக் காத்திருக்கின்றனர்.

மருத்துவர்களும் சும்மா போனவுடன் வாங்க என்று கலைத்துவிடுவதில்லை, நிறையக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், நடைமுறைகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், இவற்றுக்குப் பயந்து மருத்துவமனைக்குப் போகாமல் வெவ்வேறு வழிகளில் தங்கள் கருக்களை அழித்துவிடுபவர்கள் இந்தக் கணக்கில் சேரமாட்டார்கள்.

இத்தனை கோடிக் குழந்தைகளைக் கொல்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும், இருப்பினும் வரும்முன்னர்க் காக்க நிறைய வழிகளிருந்தும், வந்த பின்னர் , அதுவும் வளர்ந்த பின்னர் அழிப்பது எத்தனை வேதனையானது. செயற்கையான முறையில் கருவைக் கலைப்பதனால், பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆண்டாண்டு காலங்களுக்கு ஆபத்து உண்டு என்று மருத்துவ உலகம் சொல்லிக் கொண்டிருந்தாலும் இந்த எண்ணிக்கை குறைந்தபாடில்லை..

எனக்கு ஒரு அக்கா அறிமுகம் ஆனார்கள், அவர்களது கதை பெரும் சோகக் கதை, திருமணமாகி ஐந்தே மாதங்களில் கர்ப்பம். ஆனால் கணவனை விட்டு மனைவி மட்டும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும்படி சூழல், கருக்கலைத்துவிட்டார்கள். ஒரு வருடத்தில் திரும்ப வந்துவிட்டார்கள், பின்னர் சரியாக ஒன்பது வருடங்களாகக் குழந்தை இல்லை. எப்படித் துடித்திருப்பார்கள்..? பிறகு நிறைய வைத்தியத்தின் உதவியால் ஒரு குழந்தை கிடைத்ததால் அவர்கள் காப்பாற்றப்பட்டுவிட்டார்கள்.

மிகச் சமீபத்தில் இரண்டு வாரம் முன்பு, பக்கத்து கிராமத்தில் நடந்த சம்பவம், 19 வயதுப் பெண் அவள். அருகிலிருக்கும் மில்லுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தவள். திடீரென ஒரு நாள் விஷமருந்தி இறந்து விட்டாள். வீட்டிலேயே இறந்திருந்தால் என்ன ஏது என்று கூடத் தெரிந்திருக்காது, அவளது நேரம் இழுத்துக் கொண்டிருக்கிறாள் என்று மருத்துவமனைக்குக் கூட்டிப் போயிருக்கிறார்கள் பிரயோஜனமில்லை. அங்கு தான் மிகப்பெரிய அதிர்ச்சியை அவர்கள் உடைத்திருக்கிறார்கள். இறந்த பெண் ஆறு மாதக் கர்ப்பமாம். வீட்டுக்குத் தெரியவேயில்லை. ஒல்லியான உடல்வாகுள்ள பெண் என்பதால் தெரியாமல் இருந்திருக்கலாம். பிறகு காவல்துறையிடம் செல்ல, அவளது செல்பேசியை ஆராய்ந்ததில் அவள் இறப்பதற்கு முன்னர் பல முறை ஒரே எண்ணில் பேசியிருக்கிறாள். அது திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் ஒரு ஆணின் எண். இப்போது அவனைக் கைது செய்திருக்கிறார்கள்.

கருக்கலைப்பு என்பதும் ஒருவகைக் கொலைதான் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதன் பின் விளைவுகளை நாம் பூதக்கண்ணாடியின் மூலம் பெரிதாக்கி விளக்கியே ஆகவேண்டும். கொத்துக் கொத்தாக இத்தனை உயிர்களை ஆண்டுதோறும் கொல்வதைக் குறைத்து விட வேண்டும்.

பாலியல் கல்வியின் ஒரு பகுதியாகவே இதைக் கருதலாம். பாலியல் கல்வியை நமது சூழலில் கொண்டுவர இயலாத அல்லது இன்னும் நாட்கள் பிடிக்கும் நிலையில் கருக்கலைப்பு, பாலியல் நோய்கள் போன்ற முக்கியமான விஷயங்களையாவது சிறப்பு வகுப்புகளின் மூலம், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிலிருந்தே சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாம். அது ஒரு விழிப்புணர்வைத் தரும்.



வேறென்ன சொல்ல , வெறுப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

வெள்ளி, 14 நவம்பர், 2014

குழந்தைகள் தின வாழ்த்துகள் ... குழந்தைகள் அழகாக்குகிறார்கள் அசூயையான இந்த வாழ்க்கையை


பெரியவளானதும் மருத்துவராக வேண்டும் என்பதே மகளின் கனவாம். கரப்பான்பூச்சிக்கு பயந்து கத்திய நாளில் அம்மா கேட்டார்; இதற்கே பயந்தால் எப்படி மருத்துவராவது. பதினொன்னாம் வகுப்பிலேயே கரப்பான் பூச்சி, தவளையெல்லாம் அறுத்துப் பழக வேண்டும் என்று. அரண்டு போன மகள் எதற்கெனெக் கேட்டாள். மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான பயிற்சி. உதாரணத்துக்கு மனிதனின் வயிற்றில் கட்டி என்றால் வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்துவிட்டு மீண்டும் தைக்க வேண்டும் என்ற போது, என்ன தைக்க வேண்டுமா ஊசி, நூல் வைத்தா என்று சிரித்தபடியே கேட்டாள். ஆமாம் அதற்கென்று தனியா ஊசி நூல் இருக்கு என்றேன். அப்ப அதை வாங்கிக் குடுங்க. முதல்ல துணில தச்சு பழகறேன் என்று சிரித்தபடி ஓடினாள். வாங்கிக் கொடுத்தால் எதாவதொரு பொம்மைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்து விடுவாள் வழக்கம்போல …


அவமானப்படுவதும் பல்பு வாங்குவதும் அப்படி ஒன்றும் புதிய காரியமோ அல்லது ஆச்சர்யமான நிகழ்வோ அல்ல நமக்கு (என்னைச் சொன்னேன் )..

அன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை என்பதால் ஒன்பது மணிவரை தூங்கிவிட்டு எழுந்து பார்க்கும் போது படுக்கைக்கு அருகில் மடிக்கணினியில் மகள் விளையாடிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் கண்களை மூடிப் படுத்துவிட்டு மீண்டும் விழித்துப்பார்த்தால் விளையாடிக் கொண்டுதானிருந்தாள். “ பாப்பா, ரொம்ப நேரம் மடியில வச்சு விளையாடக் கூடாது, டெஸ்க்ல வச்சு விளையாடு என்றேன் " ஏம்பா" என்றாள் அப்பாவியாக, " லேப்டாப் ல ரொம்ப சூடு வரும் அது உடம்புக்கு நல்லது இல்லை " என்றேன். “ ஏம்பா, லேப்டாப்புனாலே லேப் ல வச்சு வேலை செய்றதுக்குத்தான..? அதுக்குத்தான இதை டிசைன் பண்ணி இருப்பாங்க?” என்று சொல்லிவிட்டு சிரித்தாள், சிரித்தாள், பெரிதாகச் சிரித்தாள். சமையலறையிலிருந்து இன்னொரு சிரிப்புச் சத்தமும் சேர்ந்து வந்தது துணைக்கு. விடுமுறை நாளை முன்னிட்டு இந்த பல்பு நமக்குத் தேவைதான் என்று நொந்தபடி திரும்பிப் படுத்துக் கொண்டான் பூபாலன்.


ஒருமுறை தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம், உருக்கமான காட்சி. இந்த மாதிரிக் காட்சிகளுக்கெல்லாம் மனைவி எப்போதும் தாரை தாரையாக அழுது விடுவாள். அன்றும் அப்படித்தான் கன்னம் வரைக்கும் கண்ணீர் வடிய மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். நானும், மகளும் பார்த்து விட்டோம். நாங்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டோம் அவளைப் பார்த்து. மகள் சொன்னாள் " ஏம்மா, நடிப்பு தான மா, இதுக்குப் போய் இப்படி அழறிங்களே என்று" மனைவி " ஆமா, உனக்கும் உங்க அப்பாக்கும் தான் கல் மனசு எனக்கு மென்மையான மனசு " என்று சீண்டிவிட்டுப் போய்விட்டாள்.

யோசிக்கிறேன் மகள் கொஞ்சம் மெச்சூர்டு, ஆனால் வயதுக்கு மீறிய மெச்சூர்டா என்று. நான் இந்த வயதில் இது மாதிரிக் காட்சிக்கெல்லாம் நெகிழ்ந்து அழுது கொண்டுதான் இருந்தேன். இவளுக்கு நெகுழும், இரங்கும் குணம் இருக்காதோ என்று கூட அச்சமானது.

சில நாட்கள் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். செடிக்கு, நாய்க்கு, பிச்சைக்காரர்களுக்கு, பென்சில் கேட்ட சக தோழிக்கு, தின்பண்டம் பகிரக் கேட்ட தோழர்களுக்கு என எல்லார்க்கும் இரங்கித் தான் போகிறாள். மேலும் நாம் வேண்டுமென்றே யாரிடமாவது எரிந்து விழுந்தால், கேள்வி கேட்கிறாள். சமாதானமாகிக் கொண்டேன். கு.விநாயகமூர்த்தியின் ஒரு கவிதை வரிகளைப் போல என் வயதில் சிறுவர் கூட்டம் ஒரு திரைப்படத்தில் இறந்து போனவன் இன்னொரு திரைப்படத்தில் எப்படி உயிருடன் வந்தான் என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தது, இப்போதைய குழந்தைகள் சிம்ரனுக்குக் குரல் கொடுப்பது சின்மயி என்பது வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

மாற்றங்கள் குழந்தைகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன..


பென்சில் சீவித் தர்றீங்களாப்பா ? என்று பாசமாகத்தான் கேட்டாள் இரவு 9 மணிக்கு. சரி என்று அமர்ந்தேன் சம்மணம் போட்டு. பவுச், டஸ்ட்பின், ஷார்ப்னர் எல்லாம் அவளே கொண்டு வந்து கொடுத்துவிட்டு கன்னத்தில் கைவைத்து அருகில் அமர்ந்து கொண்டாள்.

சீவுகிறேன் சீவுகிறேன் சீ....வி....க்... கொண்டே இருக்கிறேன். 24 கலர் பென்சில்கள், இரண்டு பென்சில்கள் சீவி சீவி கையே வீங்கிவிட்டது. ஒரு முறை சீவியிருந்தால் ஒன்றும் பெரிதாக இருந்திருக்காது, ஒவ்வொரு பென்சிலையும் இரண்டு மூன்று முறைகள்... ஏன்..? ஒருமுறை சீவியதும்.. “ அப்பா இன்னும் கொஞ்சம் ஷார்ப்பா என்பாள்.. இன்னும் கொஞ்சம் ஷார்ப் பண்ணும்போது உடைந்து விடும்... அவ்வ்வ்..... சாப்பிட்ட ரெண்டே ரெண்டு தோசைக்கு இவ்வளவு வேலை செஞ்சுட்டேன்.... முடியல..

# ஆமா, நான் படிக்கும்போது 12 கலர் பென்சில் தான இருந்துச்சு, எப்போ , எவன் 24 கலர் கண்டு பிடிச்சது...?????


நாளை குழந்தைகள் தினம் பாதி நாள் தான் பள்ளி என்று சந்தோசமாய்ச் சொன்னாள். குழந்தைகள் தினம் என்றால் என்ன என்று தெரியுமா எனக்கேட்டேன். நேரு மாமாவின் பிறந்த நாள் என்று சொல்லி அசரடித்தாள். அத்தோடு நிறுத்தியிருக்கலாம் என்னிடம் வழக்கம் போலவே கேள்வி கேட்டு வைத்தாள், ஏம்பா நேரு மாமாக்குக் குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும் அதனால அவர் பர்த் டே குழந்தைகள் தினமாக் கொண்டாடறோம், அப்படினா அப்துல் கலாம் சாருக்கும் குழந்தைகள் னா பிடிக்கும்ல, உங்களுக்கு, அப்புறம் நம்ம குழந்தைகள் கலைக் கொண்டாட்டத்துக்கு பொள்ளாச்சி இலக்கியவட்டத்துக்கு வந்த குமார்ஷா மாமா, ராம்ராஜ் மாமா, இனியன் மாமா எல்லாருக்கும் குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும்ல.. அவங்க பர்த்டேவ கொண்டாட மாட்டாங்களா...?

செம... இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் வரலாறு படிக்கல , ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன்.


பாரதியை ப்ரீ.கேஜி சேர்த்துவிட்ட புதிது, ஒரு நாள் வயிறு வலிக்கிறது என்று மிஸ்ஸிடம் போய் சொல்லியிருக்கிறாள். மிஸ் வயிறு வலிக்குது செல்போன் தாங்க எங்க அப்பாக்கு ஒரு போன் பண்ணிக்கறேன் என்று மிஸ் சிரித்துக் கொண்டே அப்பா உன்னை அழைத்துப்போக இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார் என்று சொல்லி இருக்கிறார். இவள், சரி போன் குடுங்க ஒரே ஒரு மெஸ்ஸேஜ் மட்டும் அனுப்பிக்கறேன் என்று சொல்லி இருக்கிறாள்.

போன பிறகு, மிஸ் இதைச் சொல்லிச் சொல்லி சிரித்தார்...






திங்கள், 10 நவம்பர், 2014

காதல் காதல் காதல், காதல் போயின்..?

நான் இதை எழுதலாமா என்று தெரியவில்லை.. பல முறை யோசித்துவிட்டுப் பதிகிறேன். கொஞ்சநேரமாக எனக்கு நானே சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை தினம் தினம் நமக்கு எத்தனை விசித்திரமான அனுபவங்களைத் தருகிறது.

சனிக்கிழமையன்று மகளுக்கு கேக் ஷாப்பில் சாப்பிட வாங்கித் தந்துவிட்டுக் கிளம்பும் போது எதிரில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். எனக்கு ரொம்பக் குழப்பம், மறதி என் மகாப் பலவீனம். யோசித்து ஒரு நிமிடம் குழம்பினேன் யாரென்று ஞாபகம் வந்து விட்டது அதற்குள் அவளே "அண்ணா நல்லா இருக்கீங்களா , என்னை ஞாபகம் இருக்கிறதா , இது உங்க பொண்ணா" என்று கேட்டாள். "ஆம்" என்றேன், அவளது கன்னத்தைக் கிள்ளிவிட்டு, தான் இப்போது ஆசிரியராகப் பணிபுரிவதாகவும், தனக்கு ஆறு மாதத்துக்கு முன்னர் தான் திருமணமானதாகவும் சொன்னாள். பார்த்தாலே தெரிந்தது. போய் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பிவிட்டேன்.

ஆம், இன்னும் எதற்குச் சிரித்துக் கொண்டிருக்கிறேன்...?

அதிகமில்லை இரண்டு வருடங்களுக்கு முன் தான் அவளைச் சந்தித்தேன். நன்றாகக் கவிதை எழுதுவாள், அழகாக ஓவியம் வரைவாள். ஒரே ஒரு முறை சந்திப்பு, பின்னர் இரண்டு முறை கவிதைகளாகக் கொஞ்சம் உரையாடல். நான்காம் முறை பேசியது அவள் என்னைப் பார்க்க வந்த போது. இந்தமுறை அவளிடம் ஒரு கடிதம் இருந்தது. என்னைப் பிடித்திருப்பதாக நேரடியாகவே சொல்லிவிட்டாள். நான் பதட்டப் படாமல் அவளிடம் செல்போனிலிருந்த எனது குழந்தையின் படத்தைக் காட்டிவிட்டு கொஞ்சம் தத்துவம் பேசினேன். தேம்பி அழுதாள். ரொம்பப் பாவமாக இருந்தது. நான் மிகப் பெரிய தவறு செய்ததைப் போல குற்ற உணர்ச்சி வந்தது. இரண்டு முறை பேசி இருக்கிறேன், இரண்டு முறையும் நான் கவிதைகளைப் பற்றியும், அவளது கல்லூரியைப் பற்றியும் மட்டுமே பேசினேன், வேறெதுவுமில்லை. அது கூடத் தவறுதானோ, அப்பொழுதே என் குடும்பத்தைப் பற்றி வலியச் சொல்லி இருக்க வேண்டுமோ என்று கூட நினைத்தேன். அந்தக் கடிதத்தில் நல்ல ஒரு கவிதை இருந்தது. இதுமாதிரியான கடிதங்களைப் பத்திரப்படுத்துவேன் ஏனோ இந்த முறை அவளிடமே கொடுத்து விட்டேன்.


அவள் அழுததற்கும், புலம்பியதற்கும் நான் ரொம்ப பயந்தேன். அடுத்த முறை அவளை நான் பார்க்கவே இல்லை. ஒரே முறை அழைத்து நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு வைத்துவிட்டாள். அதன்பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். நான் இல்லை என்றால், உலகமே இல்லை என்பது மாதிரிப் பேசியவள் இப்போது முதல் வார்த்தையிலேயே அண்ணா என்று அழைத்ததும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இன்னும் சிரிப்பாக வருகிறது.

ஒன்றும் பெரிய விஷயமெல்லாம் இல்லை என்றாலும், எனக்கென்னவோ சிரிப்பாக வருகிறது.

நாகராஜ் எவ்வளவு பெரிய காதலன், ஏனோ அவனது நினைவு வருகிறது. அப்போது ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறோம், அடிக்கடி என் வீட்டுக்கு வருவான். அப்போது என் வீட்டில் தோழியின் பெயர் எழுதிய வாழ்த்து அட்டையைப் பார்த்துவிட்டான். அவள் என்னோடு ஏழாம் வகுப்பிலிருந்து படிக்கிறாள், எனக்கு நெருக்கமான தோழி. இவன் என்னோடு ஒன்பதாம் வகுப்பில் இணைந்து நெருக்கமானவன். அந்த அட்டையை நான் தர மறுத்தபோதும் ஆசை ஆசையாகக்கேட்டு வாங்கி வைத்துக் கொண்டான். உருகி உருகி இரண்டு வருடங்கள் அவளைக் காதலிப்பதாகக் கூறினான். அவளுக்கு பாசி, பொட்டு என நிறைய வாங்கிக் கொண்டு வந்து தருவான். அவளும் மறுப்பே சொல்லாமல் " தாங்க்யூ பாய்ஸ்" என்று சொல்லி வாங்கி வைத்துக் கொள்வாள். பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் கடைசி நாளில் எல்லோரும் பேசிக் கொண்டதோடு சரி, அவள் கிளம்பி விட்டாள். இரண்டொருமுறை இவன் அவளைப் பார்க்கப் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருப்பான் அதன் பின் அவ்வளவுதான். கல்லூரியில் படிக்கும்போது ஒருத்தியைக் காதலித்ததாகவும் ஏமாற்றி விட்டதாகவும் புலம்பியிருக்கிறான் பேருந்தில் சந்தித்த ஒரு மாலையில். பின்பும் வேலை கிடைக்கும் முன்னரே அவனது உறவுக்காரப் பெண்ணைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போய்த் திருமணம் செய்து கொண்டான், ஒரு குழந்தை. வீடு சமாதானமாகி, மனைவியுடன் பிரச்சினையில் பிரிந்திருந்து சமாதானமாகி நல்ல வேலை கிடைத்து சில நாட்களில் பெருவிபத்தொன்றில் பறிபோய்விட்டான்.

கிரியும் இதே வகைதான், பத்தாம் வகுப்பில் எனக்கு ராக்கி கட்டிய தோழியை அவன் காதலித்துக் கொண்டிருந்தான், நண்பா என்று அழுத்தமாகக் அழைத்துக் கொண்டிருந்த நல்ல நண்பன், அதன் பின்பு மச்சான் என்று என்னை அழைக்கத் துவங்கியிருந்தது கொஞ்சம் அசெளகரியமாகவே இருந்தது. அவன், காம்பஸில் கையில் குத்தியே அவளது பெயரை ரத்தம் சொட்டச் சொட்ட ஒருமுறை எழுதி வைத்திருந்தான். இப்போதும் அவளை அவளது கணவனோடு அவ்வப்போது பார்க்கிறேன், பத்தாவதுக்குப் பின் கிரியைத்தான் பார்க்கவே இல்லை ஒருமுறை கூட. இப்போது ஐஸ்கிரீம் பார்லரும் மளிகைக் கடையும் வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்றும் இப்போதெல்லாம் கவிதைகள் எழுதுவதில்லை என்றும் கேள்விப்பட்டேன்.

கலாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், நான் ஏழாம் வகுப்பில் என்ன சொன்னாலும் கைதட்டுவாள், பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கும் போது கை குலுக்கி ( இது எனக்கு ஆச்சர்யம் அப்போது ) வாழ்த்துச் சொல்லுவாள். நான் தவறுதலாக வருகைப் பதிவேட்டில் சதீஸிற்கு ப்ரசன்ட் போட்டதற்கு ஊழல் செய்து விட்டதாகச் சொல்லி ரெப்ரசன்டேடிவ் பதவியைப் பறிக்க ஆசிரியர் திட்டியபோது , பூபாலன் அப்படிச் செய்ய மாட்டான் சார் என்று முதல் எதிர்க்குரல் கொடுத்தவள்.

பள்ளியில் ஆண்டுவிழா. நான் ஒரு நாடகத்தில் நடிக்க மீசையெல்லாம் வரைந்து மேடைக்குப் பின் நின்று கொண்டிருந்தேன். அப்போது அருகில் வந்து தன் கையைக் காட்டினாள், எனது பெயரைப் பச்சை குத்தியிருப்பதாக. அழுதுவிட்டேன் நிஜமாலுமே. ஏன் இப்படிச் செய்த உங்க அப்பாக்குத் தெரிஞ்சா எங்க அப்பாகிட்டச் சொல்லி பிரச்சினை ஆயிடும் என்று சொன்னேன். அவள் எதோ சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். நான் பயந்து பயந்து நாடகத்தில் நடித்து விட்டு வீடு வந்தேன். இரவெல்லாம் அவளுடைய அப்பா பிரம்பால் என்னை அடிப்பது போலவே கனவு. இரண்டு நாட்கள் விடுமுறை. திங்கட்கிழமை பயந்து கொண்டே பள்ளிக்குப் போகிறேன். வழக்கம் போலவே அவள் வருகிறாள், மிகச் சாதாரணமாகப் பேசினாள். கையைப் பார்க்கிறேன் வழக்கம் போலவே வெள்ளையாய் இருக்கிறது. பச்சை எங்கே என்று கேட்டால், பச்சையா, அது கறுப்பு பேனாவில் எழுதினது, ராத்திரி நேரம் உனக்குக் கண்ணு தெரியாதுனு தெரியும் அதான் ஏமாற்றினேன் என்று பழிப்புக் காட்டினாள். அப்போது என் முகத்தில் இருந்தது அழுகையா, சிரிப்பா என்று தெரியவில்லை. அந்தப் பள்ளியிலேயே எட்டாம் வகுப்பு வரைக்கும் டவுசரில் போனது நான் ஒரே ஒருவன் தான். என் கிட்ட போய்....


கல்லூரி நாட்களில் இப்படி ஒரு சம்பவத்துக்கும் ஆட்பட்டது இல்லை, எங்களது வகுப்பில் மூன்றே முன்று பெண்கள். அவர்களுடன் நான் பேசியது இறுதியாண்டில் பிரிவுபசாரவிழாவில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தபோது தான். கல்லூரியிலிருந்து திரும்பும் போது தினமும் ஒரு தனியார் பேருந்தில் தான் வருவோம், சக மாணவர்களும், சீனியர்களும் முன் இருக்கைகளில் தோழிகளுடன் பேருந்தே வேடிக்கை பார்க்கும் படிப் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வருவார்கள், நானும் மோகனும் கட்டக் கடைசியில் ஆறு பேர் அமரும் இருக்கை இருக்குமே, அதில் சன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு கடலை உருண்டை சாப்பிட்டுக் கொண்டு ( இருவருக்கும் ரொம்பப் பிடித்தது; இப்போது வரைக்கும்) பேசிக் கொண்டு வருவோம் அல்லது தூங்கி விடுவோம். பிறகெங்கே...


அண்ணா என்றழைக்கும் தோழிகளும் சகோதரிகளும் நிறையவே இருக்கிறார்கள். தன்னந்தனியாகப் பிறந்த எனக்கு, யாராவது அதுவும் குறிப்பாக பெண்பிள்ளைகள் அண்ணா என்று அழைத்தால் பாசம் பொங்கிக் கொண்டு வந்துவிடும் நிஜமாலுமே. இனியும் அப்படியே என்னை வைத்திரு கடவுளே ...

( இதில் வரும் ஆண் நண்பர்களின் பெயரெல்லாம் உண்மைதான், பெண் தோழியின் பெயர்மட்டுமே கற்பனை.. பெயரையும் சொல்லியா மாட்டிக்கறது..? )