திங்கள், 10 டிசம்பர், 2012

கருந்துளை - சிற்றிதழ்

நண்பர்களின் உந்துதலாலும், உதவியாலும், கருந்துளை வெளியாகி விட்டது. நிறைய இடங்களுக்கு சென்று சேர்ந்து விட்டது. அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆதரவுக் குரல்களும், அனுதாபக் குரல்களும், பாராட்டுக்களுமாக வந்து கொண்டிருக்கிறது.

தீராத அலுவல் வேலைகளினாலும், தேர்வுகள் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்ததாலும் முழு வீச்சாக இதழ் பணிகளில் இயங்க முடியாத போதும் நண்பர்ௐகளின் உதவியால் இதழ் முழுமையாக வந்திருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

நண்பர்கள் தொடர்ந்து நன்கொடை, சந்தா என்று இப்போதே தங்களது அன்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

முதல் இதழ் சற்று தாமதமாக வந்துள்ளது. நண்பர்கள்,விமர்சகர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இதழ் வேண்டுவோர் எனது எண் 9842275662-ஐ தொடர்பு கொள்ளலாம்.

அடுத்த இதழுக்கான வேலைகள் இப்போது துவங்கி விட்டன. நண்பர்கள் தங்கள் படைப்புகளை உடனே அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதழ் முகவரி : கருந்துளை,எண்-8,ராசா மில் சாலை,பொள்ளாச்சி

மின்னஞ்சல் : karundhulai@gmail.com

அன்பு கூர்ந்து நண்பர்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிற்றிதழ் நடத்துவதின் அவசியங்களையும், அதை தொடர்ந்து இயக்குவதின் சிரமங்களையும் உணர்ந்து நீங்கள் எங்கள் இலக்கியப் பணி தொடர வாழ்த்தி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

 -  இரா.பூபாலன்








வெள்ளி, 9 நவம்பர், 2012

தீபாவளி

இந்த தீபாவளி
மிகுந்த சத்தங்களுடனும்
ஆரவாரங்களுடனும்
அதீத வலியுடனுமே
வந்திருக்கிறது ...

வழக்கமாக
வெளியில் ஒலிக்கும்
சத்தங்கள்
சந்தோஷம் தரும்.

இம்முறை
அணுகுண்டுகளும்
ஆயிரம் வாலாக்களும்
வெடித்துக் கொண்டிருப்பது
மனதுக்குள்.

சிவகாசியில் வெடி விபத்து
ஈழத்துக் கண்ணீர்
என எல்லாம் சேர்ந்து
நெஞ்சை அழுத்த
எதைக் கொண்டாடுவது..?

செவ்வாய், 2 அக்டோபர், 2012

கருந்துளை - சிற்றிதழ்


வணக்கம்,
 
 நண்பர்களுடன் இணைந்து கருந்துளை என்ற சிற்றிதழ் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அறிமுக அறிக்கையை இத்துடன் இணைத்துள்ளேன்.
 
முதல் இதழ் உருவாகி வருகிறது. கவிதைகள்,கட்டுரைகள்,விமர்சனங்கள் என உங்கள் படைப்புகளை உடனடியாக கொடுக்கப் பட்டுள்ள முகவரிக்கோ அல்லது கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பவும்.
 
உங்கள் தொடர்பு எண்,முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் குறிப்பிடவும்.
மின்னஞல் முகவரி : karundhulai@gmail.com

வியாழன், 5 ஏப்ரல், 2012

சிரிக்க...

 
 
நட்புடன்,
இரா.பூபாலன்
 
செல்பேசி :9842275662
 
 
 

வெள்ளி, 30 மார்ச், 2012

கவன ஈர்ப்பு

 

எத்தனை முக்கியமான

வேலையில்

மும்முரமாக

இருந்தாலும்

நிமிர்ந்து பார்க்க

வைத்து விடுகிறது

கடந்து போகும்

கொலுசுச் சத்தம்


புதன், 21 மார்ச், 2012

என் புன்னகை


என் கவிதைகளில்
நிரம்பி வழிகிற
கண்ணீர் எனதே எனது.
 
என் கவிதைகளில்
எப்போதாவது
கிளையும்
புன்னகை நிச்சயம்
உனது.
 

திங்கள், 12 மார்ச், 2012

ரத்த தேசம்


 
Channel -4 வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்தீர்களா நண்பர்களே.
நெஞ்சு பதைபதைத்து கண்கள் முட்டவில்லையா..?
நமது இனம் இன்னும் எத்தனை கொடுமைகளைத் தாங்கும்..?
நமது சகோதர சகோதரிகள் வன்கொடுமைக்கு ஆளாவதையும்,
சிதறுண்டு சாவதையும் எப்படி சகிப்பது..?
 
If you want see it again Visit :

http://thaaitamil.com/?p=11947

எதுவுமே செய்யாத எல்லாரையும் காலம் கவனித்துக்
கொண்டே இருக்கிறது. நாளைய வரலாற்றில் நம்
பெயர்கள் துரோகிகளாகவும்,கையாலாகாதவர்களாகவும்
பதியப்படும்.

புத்த தேசம்
ஆனது
ரத்த தேசம்.


புன்னகை - கவிதை இதழில் வெளியான எனது கவிதை:
 
 
தாய்ப்பால் பற்றிய - ஒரு
கவிதையை எழுத
நினைக்கையில் அங்கு
அறுத்தெறியப் படுகின்றன
சில மார்பகங்கள்...
குழந்தையின் புன்னகையை
கவிதைப் படுத்த நினைக்கையில்
அங்கே புதைக்கப்படுகின்றன
பல குழந்தைகளின் கடைசிப்
புன்னகைகள்...
பூக்களை எழுதலாம் என்றால்
சாம்பல் காடுகளே
எஞ்சியிருக்கின்றன..
எதைப்பற்றியும்
எழுதவியலாமல் கடைசியில்
கடவுளைப் பற்றி எழுத
நினைக்கையில் அங்கு
குண்டு சத்தங்களுக்கு பயந்து
கருவறையை
காலி செய்துகொண்டு
ஒடி விட்டாராம் கடவுள்....
கடவுளே இல்லாத ஊரில்
யாரிருக்கிறார் இப்போது..?

 

புதன், 7 மார்ச், 2012

மகளிர் தின வாழ்த்துக்கள்.

அன்பு - இந்த
அழகான சொல்லுக்கு
முதல் அர்த்தம்
அம்மா.
எப்போதும் சீண்டி
தோல்விகளில் தூண்டி
தன்னை நமது
முதல் குழந்தையாகவே
காட்டிக் கொள்வாள்
தங்கை.
நம்மில் பாதியாய்
நம் கரம் பற்றி
நம்மை முழுமையாக்குபவள்
மனைவி.
நம் வாழ்வின்
அடையாளமாய்,
அங்கீகாரமாய்,
வசந்தம் தரும் தேவதையாய்
மகள். 
 
பெண்கள் இல்லாத உலகம்
நிச்சயம் சாத்தியப் படாது.
பெண்கள் இல்லாத வாழ்க்கை
நிச்சயம் வாழ்க்கையாயிருக்காது.
 
மகளிர் தின வாழ்த்துக்கள்.
பெண்மையைப் போற்றுவோம்.

நீயும் என் அன்னை

யாரிடத்தும்
சொல்லியழ முடியாத
என் உள் வலியை
உன்னிடம் சொல்லாமலே
புரிந்து கொண்டு
தேற்றுகிறாய் என்னை.

இதன் காரணமாகவே
சொல்கிறேன் - நீயும்
என் அன்னை என்று.

திங்கள், 5 மார்ச், 2012

கவிதைகள்

நெடுந்தூரப்
பயணமானாலும்,
நெடுநாள் தங்கலாயினும்.
தனிமையைத்
தவிர்த்து விட
முடிகிறது எளிதாய்.
வழி நெடுகிலும்
என்னுடன்
வந்து கொண்டே
இருக்கிறதுன் காதல்.
குரலோசையகவும்,
குறுஞ்செய்திகளாகவும்.
***************************************************
ரயில் பயணத்தில்
எதிர் இருக்கையில்
உறங்கிக் கொண்டிருந்த
குழந்தை
அழகழகாகப்
பேசிக் கொண்டே
வந்தது உறக்கம்
வராமல் உட்கார்ந்திருந்த
என்னிடம்.
*************************************************
விபத்தில்
எல்லா இடத்திலும் தான்
அடிபட்டது என்றாலும்
கைக் கட்டில்
மட்டும் முத்தமிட்டு
விரைவில் நலமாகி வா
என நீ சொல்லிப் போனதில்
வருத்தம் தான் எனக்கு.
***************************************************
காதலர் தினப்
பரிசாக
இது வேண்டுமா
அது வேண்டுமா
எனக் கேட்டேன்
வழக்கம் போலவே.
எதுவும் வேண்டாம்
என்றாய்  வழக்கம் போலவே.
எதை வாங்குவது
என குழம்பி
முழம் மல்லிகைப்
பூவுடனும் - சில
முத்தங்களுடனும்
முடித்துக்
கொள்கிறேன் இப்போதும்.
************************************************
என் கண்களும்
உதடுகளுமே
உன்னிடம் வெகுநேரம்
பேசிக் கொண்டிருக்க,
பொறுமையிழந்த
என் கை கடைசியில்
உன் தலை முடியைக்
கொதிவிட்டுத்
தேற்றிக் கொள்கிறது. 
****************************************************
எல்லாரிடத்தும்
சொல்வதற்காக
எதையாவதொன்றை
வைத்திருக்கிறாய்
எப்போதும்.
என்னிடம் மட்டுமே
சொல்ல வைத்திருக்கும்
உன் காதலை
எப்போது சொல்லப் போகிறாய்.?
*******************************************************
 

புதன், 29 பிப்ரவரி, 2012

கடவுளின் கதை

 
 
 
 
 
சிவப்பு விளக்கெரியும்
சாலை சந்திப்புகளில்
பிச்சை எடுக்கிறார்கள்
கடவுள்கள்.
 
பதினாறாம் வய்ப்பாட்டைத்
தலைகீழாய் ஒப்புவிக்கச் சொல்லி
பிரம்படி வாங்குகிறார்கள்.
 
பாதி கட்டி முடிக்கப்பட்ட
ஒரு கட்டிடத்தில்
வன் புணர்வு கொண்டு
சீரழிக்கப் படுகிறாள்
ஒரு கடவுள்.
 
பொம்மையை
வைத்திருந்த கடவுளின் கையில்
பிடிவாதமாகத் திணிக்கப் படுகிறது
தலையணையொத்த புத்தகங்கள்.
 
பாத்திரங்கள் கழுவவும்
சமையலைக் கற்றுக் கொள்ளவும்
கட்டாய வகுப்பெடுக்கிறார்கள்
பெண் கடவுள்களுக்கு மட்டும்.
 
இழி மனிதர்களின்
தேசத்தில்
வதைக்கப்பட்டு
சிறகுகளை முறித்துக்
கொண்டு
மனிதர்களாகவே
வளர்ந்து விடுகிறார்கள்
கடவுளாய்ப் பிறந்த
குழந்தைகள்.
 

புதன், 22 பிப்ரவரி, 2012

CCTV camera videos

Good Noon..
 

 
நட்புடன்,
இரா.பூபாலன்
 
செல்பேசி : 9842275662
 
 

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

மலரினும் ...

 

மலரினும் மெல்லிய

உன் இதயத்தில்

மலையினும் பெரிதாய்

இருக்கிறது

என் மீதான உன் காதல்.

          


இதய வடிவிலான

ரோஜாப் பூவொன்றைப்

பரிச்சளிக்கிறேன்.

ரோஜாவினும் மென்மையான

இதயம் கொண்ட உனக்கு.

           

புதன், 15 பிப்ரவரி, 2012

அம்மன் கோவில்
அர்ச்சனைப் பூவை
கூந்தல் கற்றையை
ஒதுக்கி நீ
சூடிக் கொள்ளும்
நேர்த்தியைப் பார்த்து
தன் கூந்தலை
ஒருமுறை சரி
செய்து கொள்கிறாள்
அம்மன்
யாரும் அறிந்திராவண்ணம்.

திங்கள், 13 பிப்ரவரி, 2012

காதல்

இரு மனதில்
ஒரு எண்ணம்
 
இரு விழிகளில்
ஒரு காட்சி
 
இரு உடலில்
ஒரு உயிர்
 
ஒரே சொல்லில்
ஒரு வாழ்க்கை
 
 
 
 

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சுவரெங்கும்
வண்ண வண்ண
சித்திரங்கள்
குழந்தை  கை வண்ணத்தில்.
விலை கொடுத்து
வாங்கி வந்து
சுவற்றில் மாட்டப்பட்ட
அழகிய ஓவியமொன்று
ஏங்கித் தவிக்கிறது
இப்படி இருந்திருக்கலாம் என்று.
கடவுள்களின்
நகரத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
நீ.
ஒரு வழிப் போக்கனாக
உன்னுள் நுழைந்த
நானும்
மாறியிருக்கிறேன்
கடவுளாக.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

அழுகை

 
ஓவெனக் கதறி
அழுவதைக் காட்டிலும்
அதிகம் வலிப்பது
சத்தமில்லாமல் அழுவது.
அதனினும் அதிகம்
வலிப்பது
கண்களில் நீர் வராமல்
அழுவது.